குஜராத்தில் மாம்பழம் திருடிய நபர் அடித்து கொலை – 5 பேர் கைது

குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் உள்ள ஒரு பழத்தோட்டத்தில் இருந்து ரூ.50,000 மதிப்புள்ள மாம்பழங்களைத் திருடியதாக சந்தேகத்தின் பேரில் விவசாயத் தொழிலாளி ஒருவரை அடித்துக் கொன்றதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
48 வயது சுரேஷ் வர்மா என்பவரை ஐந்து குற்றவாளிகள் கொடூரமாகத் தாக்கி, பின்னர் அவரது உடலை கால்வாயில் வீசியதாக பர்தோலி துணை காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
“அஷ்பக் ராயன், வினோத் அகர்வால், முகமது உமர், தஷ்ரத் மௌரியா மற்றும் யாகூப் அப்துல் கஃபர் ஆகியோர் கொலைக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். அஷ்பக் மற்றும் பலர் சிறிது காலத்திற்கு முன்பு பர்தோலியின் அகோட்டி கிராமத்தில் ஒரு மாம்பழத் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து வர்மாவையும் மற்றொரு கிராமவாசியையும் தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்தினர். சமீபத்தில், வர்மா பண்ணையில் இருந்து ரூ.50,000 மதிப்புள்ள மாம்பழங்களைத் திருடி சந்தையில் விற்றதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
“பின்னர் அவர்கள் வர்மாவை பண்ணையில் உள்ள ஒரு மரத்தில் கட்டி வைத்து, அவர் மயக்கமடையும் வரை அவரை அடித்தனர். பின்னர், அஷ்பக் வர்மாவின் மனைவியை தொலைபேசியில் அழைத்து, மாம்பழங்களைத் திருடியதன் மூலம் கணவர் தங்களுக்கு ஏற்படுத்திய இழப்புக்கு ரூ.50,000 கோரினார். வர்மா அடித்ததால் இறந்துவிட்டதை உணர்ந்ததும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் உடலை தங்கள் காரில் ஏற்றிச் சென்று கம்ரேஜ் தாலுகாவில் உள்ள ஒரு கால்வாயில் வீசினர்,”.
வர்மா வீடு திரும்பாதபோது, அவரது குடும்பத்தினர் பர்தோலி போலீஸை அணுகி, காணாமல் போனதாக புகார் அளித்தனர், மேலும் அஷ்பக் ரூ.50,000 கேட்டது குறித்தும் போலீசாரிடம் தெரிவித்ததாக துணை எஸ்பி தெரிவித்தார்.