மீண்டும் தாய் வீடு திரும்பும் மைத்திரி?
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒன்றிணைவது மிகவும் நல்லது என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேன பக்கம் இருந்த விஜயதாச ராஜபக்ச சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறினார்.
“ கட்சி தொடர்பில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றை மீளப்பெற்று இணைவது நல்லது.
எனக்கு எதிராகவும் வழக்குகள் உள்ளன. அவை முடிவடைந்த பின்னரே நான் முடிவொன்றை எடுப்பேன். விஜயதாச ராஜபக்ச எனக்கு அறிவித்துவிட்டே சென்றார்.
தலைமைப் பதவிக்கு வருபவர் பற்றி தெரிந்த பின்னரே கட்சியுடன் இணைந்து செயல்படுவது தொடர்பில் முடிவெடுக்கப்படும்.” எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் தாய்வீடு. அக்கட்சியில் பொதுச்செயலாளராக பதவி வகித்தார்.
2015 இல் நடைபெற்ற தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்கினார். வெற்றிபெற்ற பின்பு கட்சியைக் கைப்பற்றி தலைவராகவும் தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது.





