நாட்டில் மீண்டும் இனவாதம் தலைதூக்க இடமளியோம்: யாழில் ஜனாதிபதி சபதம்!
நாட்டில் மீண்டும் இனவாதத்தை தூண்டுவதற்கு சிலர் முற்படுகின்றனர். அதற்கு இடமளிக்கமாட்டோம். இனவாதம் நிச்சயம் தோற்கடிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (16) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு உறுதியளித்தார்.
“ போரின்போது வடக்கில் பல வீடுகள் சேதமடைந்தன. இவ்வாறு சேதமடைந்த வீடுகள் இன்னும் முழுமையாக மீளமைக்கப்படவில்லை.
போர் காலத்திலும் இடம்பெயர்ந்து வாழ்தனர். தற்போதும் இடம்பெயர்ந்து வாழ வேண்டிய நிலை. தமக்கென வீடொன்று இன்மையே இதற்கு பிரதான காரணமாகும்.
எனவே, போரால் இடம்பெயர்ந்த மக்கள் எதிர்நோக்கும் வீடில்லாப் பிரச்சினைக்கு எமது ஆட்சியின்கீழ் தீர்வு காணப்படும்.” – எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
எம்மீது நம்பிக்கை வைத்தே வடக்கு மக்கள் வாக்களித்தார்கள். அந்த நம்பிக்கையை சிதைக்கும் வகையில் நாம் செயல்படமாட்டோம். ஏனெனில் இது மக்களுக்கான அரசாங்கமாகும்.
அதேவேளை, இனவாதம் என்பது இந்நாட்டுக்கு அழிவையே தந்துள்ளது. இதன்மூலம் எவ்வித நன்மையும் கிட்டவில்லை. மக்கள் மத்தியில் துயரங்களே குவிந்தன.
தற்போதும் அரசியலுக்காக இனவாதப் பிரச்சினையை தோற்றுவிப்பதற்கு சிலர் முற்படுகின்றனர். நாம் இனவாதத்துக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.” – என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.





