பிரித்தானிய கடவுச்சீட்டில் ஏற்படப்போகும் புதிய மாற்றம்

பிரித்தானிய கடவுச்சீட்டில் புதிய மாற்றம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் புதிய கடவுச்சீட்டுகளின் முன்பக்கத்தில் மன்னர் சார்லஸின் சின்னமே இடம்பெறும் என உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடவுச்சீட்டின் பக்கங்களில் “அவரது மாட்சிமை” என்ற வாசகமும் இடம்பெறும். எனினும் தற்போதைய கடவுச்சீட்டின் அட்டைப்படத்தில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் சின்னமே உள்ளது.
புதிய கடவுச்சீட்டுகளில் பிரித்தானியாவில் நான்கு பகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், பென் நெவிஸ் (Ben Nevis), லேக் டிஸ்ட்ரிக்ட் (Lake District), த்ரீ கிளிப்ஸ் பே (Three Cliffs Bay) மற்றும் ஜெயண்ட்ஸ் கோஸ்வே (Giant’s Causeway) ஆகிய இயற்கை நிலப்பரப்புகள் பக்கங்களில் இடம் பெற்றுள்ளன.
இது, பாரம்பரியத்தையும் இயற்கைச் சிறப்புகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியாகும்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதையடுத்து, பர்கண்டி நிறத்தில் இருந்து பிரித்தானிய கடவுச்சீட்டு நீல நிறத்திற்கு மாறியபோது இது முதல் முழுமையான மறுவடிவமைப்பாக காணப்பட்டது.
எனினும் ராணியின் சின்னம் இடம்பெற்றுள்ள பழைய கடவுச்சீட்டுகள் அவை காலாவதியாகும் வரை செல்லுபடியாகும்.
புதிய கடவுச்சீட்டுகளில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. போலி எதிர்ப்பு தொழில்நுட்பங்களை இவை கொண்டுள்ளன. இதனால் மோசடி செய்வது அல்லது சேதப்படுத்துவது கடினம் என உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
மன்னர் சார்ல்ஸின் சின்னத்தில் அவர் தேர்ந்தெடுத்த டியூடர் கிரீடம் இடம்பெற்றுள்ளது. ஒரு ஆட்சியிலிருந்து மற்றொரு ஆட்சிக்கு மாறும் செயல்முறையின் கீழ், நாணயங்கள், முத்திரைகள், நோட்டுகள் என அனைத்திலும் இந்த மாற்றங்கள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
மரபின்படி, மன்னருக்குக் கடவுச்சீட்டு தேவையில்லை. எனினும் அனைத்தும் அவரது பெயரிலேயே வழங்கப்படுகின்றன.
அரசாங்கம் மக்கள் தங்கள் கடவுச்சீட்டின் செல்லுபடியாகும் காலத்தை சரிபார்த்து, தேவைப்பட்டால் பயணத்திற்கு முன் புதுப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது .