பல நாட்களின் பின்னர் வழமைக்கு திரும்பிய கண்டி – நுவரெலியா வீதி
மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த கண்டி – நுவரெலியா வீதி உட்பட 4 வீதிகள் பல நாட்களின் பின்னர் வழமைக்கு திரும்பியுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்தார்.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரையின் பேரில் குறித்த வீதிகள் கனரக வாகன போக்குவரத்திற்காக திறக்கப்படுவதாக அவர் கூறினார்.
இதேவேளை, கட்டுகித்துல, தவலந்தென்ன, ரம்பொடை நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களிலும் பாரியளவில் மண்சரிவு ஏற்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், இராணுவத்தின் பொறியியல் படையணி மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியவை இணைந்து அவ்வீதியை முழுமையாக புனரமைத்து, ஒரு வழித்தடத்தை மட்டும் இலகு ரக வாகனங்களுக்கு திறக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இருப்பினும், இவ்வீதியில் பயணிக்கும் போது அவதானமாக வாகனங்களை செலுத்துமாறும், மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் எனவும் பொலிஸார் சாரதிகளை கேட்டுக்கொள்கின்றனர்.




