கண்டி- காணாமல் போன மாணவன் மகாவலி ஆற்றிலிருந்து சடலமாக மீட்பு

கண்டி – தென்னேகும்புர பாலம் அருகே காணாமல் போன இரண்டு மாணவர்களில் ஒருவரின் சடலம் மகாவலி ஆற்றில் இருந்து இன்று மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட மாணவர் 14 வயதுடைய ஜெகதீஸ் என தெரியவந்துள்ளது.
நேற்று (09) இரு பாடசாலை மாணவர்கள் காணாமல் போனதாக காவல்துறைக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டது.
கண்டி நகரில் இரு பாடசாலைகளில் கல்வி கற்று வந்த ஜெகதீஷ் மற்றும் எம்.மிலான் ஆகியோர் நேற்று மாலை வளர்ப்பு மீன்களை கொள்வனவு செய்வதாக கூறி வீடுகளில் இருந்து திகன பகுதிக்கு சென்றுள்ளனர். இதற்கிடையில், குறித்த இருவரும் மகாவலி ஆற்றில் இறங்கி பாறைக் கரையில் இருந்ததாக அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
கண்டி தலைமையக காவல்துறை மற்றும் பலகொல்ல காவல்துறையும் இணைந்து காணாமல் போன மாணவர்களைத் தேடுவதற்காக கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டதுடன், மகாவலி ஆற்றில் தேடுவதற்காக கடற்படையின் சுழியோடிகளும் பயன்படுத்தப்பட்டிருந்தனர்.
இதன்போதே காணாமல் போயிருந்த ஒரு மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.