ஜே.வி.பியினர் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்லர்: டில்வின் சில்வா தெரிவிப்பு!
“ஜே.வி.பியினர் JVP இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்லர். அப்போதைய இந்திய அரசாங்கத்தை மட்டுமே எதிர்த்தோம்.” என்று ஜே.வி.பியின் பொதுச்செயலர் டில்வின் சில்வா tilvin silva தெரிவித்தார்.
இந்திய வியாப்தவாதத்துக்கு எதிராக அன்று செயல்பட்ட ஜே.வி.பி, இன்று அந்நாட்டின் தேவைக்கேற்ப செயல்படுகின்றது என சில எதிரணிகள் குற்றஞ்சாட்டிவருகின்றன.
ஜே.வி.பி. செயலாளரின் அண்மைய இந்திய விஜயத்தைக்கூட கடுமையாக விமர்சித்துவந்தன.
இந்திய விரோத நிலையில் இருந்த உங்கள் கட்சி, தலைகீழாக மாறி, இந்தியாவுடன் மிக நெருக்கமாக இருக்கத் தீர்மானித்துள்ளதாக பரவலாகக் கூறப்படுகிறதே என டில்வின் சில்வாவிடம் ஊடகமொன்று கேள்வி எழுப்பியது.
இதற்கு பதிலளித்த அவர்,
“நாங்கள் ஒருபோதும் இந்தியாவை எதிர்க்கவில்லை. ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய அரசாங்கத்தையும், இலங்கையில் ஜே.ஆர். ஜயவர்தன அரசாங்கத்தையும், அவர்கள் பின்பற்றிய அரசியல் கொள்கைகளையும் தான் எதிர்த்தோம்.
எனவே,ராஜீவ் காந்தி மற்றும் ஜே.ஆர். ஜயவர்தன அரசாங்கங்களை நாங்கள் எதிர்த்து செயற்பட்டோம்.
இது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக நடந்தது, இது இன்றும் நடக்கக் கூடாத ஒன்று என்று நாங்கள் கூறுகிறோம்.” ஏன குறிப்பிட்டார்.
இது 38 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு, இப்போது உலகம் மாறிவிட்டது. இந்தியா மாறிவிட்டது, நாமும் மாறிவிட்டோம். எதிர்கால உறவுகளுக்கு கடந்த காலத்தை நாம் ஒரு தடையாக மாற்ற வேண்டியதில்லை.
இந்த வாதத்தின்படி நாம் சென்றால், பிரித்தானியாவுடனும் நாம் தொடர்பு கொள்ள முடியாது. அவர்கள் எம்மை அடிமைப்படுத்தினர்; அவர்கள் 1815 கிளர்ச்சியை அடக்கினர், ஆனால் நாம் முன்னேறிவிட்டோம்.
வரலாறு என்பது வரலாறு, நாம் அனைவரும் அதிலிருந்து கற்றுக்கொண்டோம். நிகழ்காலத்திற்கு ஏற்ப நாம் செயற்பட வேண்டும். கடந்த காலத்தில் வாழ்வது தவறு.” என டில்வின் சில்வா மேலும் குறிப்பிட்டார்.





