ஜப்பான் சேவை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கள வைத்தியசாலையில் சிகிச்சை.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசர மருத்துவ சேவையை வழங்குவதற்காக, சிலாபம் பொலிஸ் மைதானத்தில் முழுமையாக பொருத்தப்பட்ட நடமாடும் கள வைத்தியசாலையை ஜப்பானின் பேரிடர் நிவாரணக் குழு (JDR) நிறுவியுள்ளது.
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ, இன்றைய தினம் குறித்த வைத்தியசாலையை ஆய்வு செய்து, அவசரகாலத்தின் போது விரைவான நடவடிக்கை எடுத்த ஜப்பான் அரசாங்கத்திற்கும் ஜப்பானின் பேரிடர் நிவாரணக் குழுவினருக்கும் இலங்கை சார்பாக நன்றி தெரிவித்தார்.
இந்த கள வைத்தியசாலையில் கடந்த 04 ஆம் திகதி முதல் தினமும் காலை 9:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை சேவைகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாளொன்றுக்கு 100 இற்கும் மேற்பட்ட நோயாளர்களுக்கு இந்த வைத்தியசாலை சிகிச்சை அளிக்கிறது.
சிலாபம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இந்த சேவைகள் வழங்கப்படுகின்றன. சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சேவைகளை கூடுதலாக வழங்கப்படுகிறது.
இந்த கள வைத்தியசாலையின் செயற்பாடுகள் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சுகாதார அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து நிறுவப்பட்ட இந்த கள வைத்தியசாலை, இடம்பெயர்ந்தவர்கள் அல்லது பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய சுகாதாரப் பராமரிப்புக்கான தொடர்ச்சியான அணுகலை உறுதி செய்கிறது.
நெருக்கடி காலங்களில் ஜப்பானின் நீண்டகால ஆதரவை பாராட்டிய அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ ஜப்பானின் பேரிடர் நிவாரணக் குழுவின் உடனடி
வருகை மற்றும் திறமையான மருத்துவ சேவைகள் உள்ளூர் மீட்பு முயற்சிகளுக்கு முக்கியமானவை என்பதை எடுத்துக்காட்டினார்.
இந்த ஆய்வில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாடா, இலங்கைக்கான உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி டொக்டர் ராஜேஷ் சம்பாஜிராவ் பாண்டவ், மூத்த சுகாதார அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஜப்பானின் பேரிடர் நிவாரணக் குழுவில் சிறப்பு மருத்துவர்கள், தாதியர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள்
உட்பட 31 மருத்துவ பணியாளர்கள் உள்ளனர்.





