‘தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு’: வழக்கு ஒத்திவைப்பு!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் சுமார் நாலரை மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது.
இந்த வழக்கில் இடையீட்டு எதிராளியாகத் தம்மைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கோரி சுப்பிரமணியம் பரமானந்தம் என்பவர் தாக்கல் செய்திருக்கின்ற விண்ணப்பத்தின் மீதான விசாரணைக்காகவே வழக்கு ஜூலை 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வழ்க்காளியும் ஏனைய எதிராளிகளும் இது தொடர்பான தமது தரப்பு வாதங்களை எழுத்து மூலம் சமர்ப்பிப்பதற்காக இந்தக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அந்தத் திகதியில் இந்த விடயம் குறித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பது பற்றி நீதிமன்றம் தீர்மானிக்கும்.
இடையீட்டு எதிராளியாகச் சேர்த்துக் கொள்ளுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவின் மீது விசாரணை முடிந்து, ஒரு முடிவு கட்டிய பின்னரே, மூல வழக்கின் மீதான விசாரணையை நீதிமன்றம் ஆரம்பிக்கும் எனத் தெரிகின்றது.
வழக்கில் புதிய எதிராளியாக இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவரின் இடத்துக்கு சி.வி.கே.சிவஞானம் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ள பின்னணியில், வழக்குத் தொடர்பான அவரது பதில் மனு நீதிமன்றத்தில் அணைக்கப்பட்டுள்ளது.
அப்படி அவரது பதில் மனுவைச் சேர்த்துக் கொள்வதை எதிராளிகளில் ஒருவரான சிவஞானம் சிறீதரனின் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி புவிதரன் இன்று கடுமையாக ஆட்சேபித்தார்.
ஏற்கனவே எதிராளியாக இவ்வழக்கில் இருந்த கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இந்த வழக்குத் தொடர்பாக தமது பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அந்தநிலையில் அவருக்குப் பதிலாகப் பதிலீடு செய்து வழக்குக்குள் வரும் எதிராளியான சி.வி.கே.சிவஞானம் தமது புதிய பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்ய வேண்டிய இடமில்லை என்று அவர் வாதிட்டார்.
ஆயினும் எதிராளிகளான சி.வி.கே.சிவஞானம் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் இன்று நீதிமன்றத்தில் அந்த வாதத்தை எதிர்த்து வாதம் செய்தனர்.
நீதிமன்றம் இருதரப்பு வாதத்தையும் இன்றைய அமர்வில் செவிமடுத்துப் பதிந்து கொண்டது.
வழக்கில் இடையீட்டு எதிராளியாக தம்மை சேர்த்துக்கொள்ளக் கோரி சுப்பிரமணியம் பரமானந்தம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவடைந்து, மூல வழக்கின் மீதான விசாரணை ஆரம்பமாவதற்கு நீண்ட காலம் செல்லலாம் என்று அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
இந்த வழக்கில் தமக்குத் தாமே நேரடியாக நீதிமன்றத்தில் பிரசன்னமாகி வாதாடி வரும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்றைய வழக்கு விசரணையின் போது, மன்றில் ஆஜராகவில்லை. அவர் சார்பில் சட்டத்தரணி ஒருவர் பிரசன்னமானார்.




