இலங்கையில் வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது நிறுத்தம்

இலங்கையில் மோட்டார் வாகனங்களை பதிவு செய்யும் போது, வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இலக்கத் தகடுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி முதல் இது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் கூறியுள்ளது.
அதன்படி, பதிவு செய்யப்பட்ட செஸி இலக்கத்தை கொண்ட மோட்டார் வாகனங்களுக்கு இலக்கத் தகடுகளோ ஸ்டிக்கர்களோ வழங்கப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய மோட்டார் வாகனம் பதிவு செய்யும் போது இலக்கத் தகடுகள் வழங்கப்படாவிட்டாலும், அவர்களுக்கு சம்பந்தப்பட்ட வாகன இலக்கத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார்.
அதன்படி, மோட்டார் வாகன உரிமையாளர்களுக்கு அந்த இலக்கத்தை பிரதி செய்து, வாகனத்தில் காட்சிப்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக கமல் அமரசிங்க தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பாக பொலிஸாருக்கும் தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.