காஸாவில் பள்ளி வளாகம் உட்பட இரு இடங்களில் இஸ்ரேலியத் தாக்குதல்; 52 பேர் பலி

காஸாவில் வீடுகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டோர் தங்கியிருந்த பள்ளி வளாகம் உட்பட இரு இடங்களில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 52 பேர் கொல்லப்பட்டதாக திங்கட்கிழமை (மே 26) அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்ரேல், ஹமாஸ் இயக்கத்தின் ராணுவத்தையும், காஸா பகுதியில் ஹமாஸ் இயக்கத்தின் ஆளுமையையும் முடிவுக்குக் கொண்டுவர எண்ணம் கொண்டுள்ளது. அத்துடன், 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி பிணை பிடித்து வைத்திருப்போரை விடுவிக்கும் பொருட்டு இவ்வாண்டு மே தொடக்கத்தில் இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியது.
இஸ்ரேல் டார்ஜா என்ற இடத்தில் மேற்கொண்ட தாக்குதலில் மாதர், சிறார் எனப் பலர் உயிரிழந்ததாக அங்கிருக்கும் மருத்துவத் துணை ஊழியர்கள் தெரிவித்தனர்.இதில் பல உடல்கள் மிக மோசமான முறையில் தீப்பிடித்து எரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், இதை உறுதி செய்ய முடியவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் தெரிவிக்கிறது.இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேலிய ராணுவம் எவ்விதக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், அமெரிக்க ஆதரவுடன் காஸா பகுதிக்குள் உதவிப் பொருள்களை கொண்டு செல்லும் பணியை மேற்கொண்ட உதவி அமைப்பு ஒன்று தான் அதிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளது. இதனால் காஸாவுக்குள் செல்வதாக இருந்த உதவிப் பொருள்களை இனி அங்கு கொண்டு செல்ல முடியுமா என்ற நிச்சயமற்ற நிலை தோன்றியுள்ளது.
காஸாவுக்குள் மனிதநேய கொள்கைகளுக்கு உட்பட்டு உதவி செய்யும் தனது திட்டத்தைச் செயல்படுத்த தன்னால் முடியவில்லை என்று காஸா மனிதநேய அறக்கட்டளை என்ற அந்த அமைப்பு விளக்கியது.
ஜெனிவா நகரில் பிப்ரவரி மாதம் முதல் தலைமையகம் கொண்டுள்ள அந்த அறக்கட்டளை தனது முதல் 90 நாள் பணியில் 300 மில்லியன் அளவு உணவை விநியோகிக்க உறுதி கூறியிருந்தது.எனினும், ஐ.நா அமைப்பு மற்ற வழக்கமான உதவி அமைப்புகள் போன்றவை அது இஸ்ரேலுடன் கூட்டுச் சேர்ந்து செயல்படுவதாகக் கூறி, அந்த அமைப்புடன் ஒத்துழைக்க மறுத்துவிட்டன.
தன் மீது ஹமாஸ் இயக்கம் தொடுத்த தாக்குதலுக்கு பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் ராணுவத் தாக்குதல் மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து காஸாவில் ஏற்பட்டுள்ள நிலையால் இஸ்ரேலுக்கு எதிராக அனைத்துலக ரீதியாக நெருக்குதல் ஏற்பட்டது. இதன் காரணமாகவே காஸா மனிதநேய அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.