தெற்கு சிரியாவில் இஸ்ரேல் ஊடுருவல் – இறையாண்மையை மீறுவதாக சிரியா கண்டனம்
தெற்கு சிரியாவின் குனைட்ரா (Quneitra) மாகாண கிராமப்புறத்தில் அமைந்துள்ள சைதா அல்-கோலன் ( Saida al-Golan) கிராமத்திற்குள் பன்னிரண்டு இஸ்ரேலிய இராணுவ வாகனங்கள் நுழைந்துள்ளதாக அல் ஜசீரா செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஊடுருவல், சிரியாவின் இறையாண்மையை மீறும் நடவடிக்கையாகும் என சிரிய அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் ஒருங்கிணைப்பு மற்றும் மத்தியஸ்தத்தின் கீழ், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சிரிய பிரதிநிதிகள் குழு இஸ்ரேலிய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக சிரிய அரசு செய்தி நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை சிரியாவின் இறையாண்மையை மீறுவதுடன், நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளையும் பாதிப்பதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது.
டமாஸ்கஸுக்கு வெளியே உள்ள பீட் ஜின்னிலிருந்து தகவல் வழங்கிய அல் ஜசீரா நிருபர் அய்மன் ஓகன்னா, சிரியா–இஸ்ரேல் இடையே இன்னும் பெரும் கருத்து வேறுபாடுகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தெற்கு சிரியாவை முழுமையாக இராணுவமயமாக்கவும், ஜபல் அல்-ஷேக் பகுதியில் இராணுவ புறக்காவல் நிலையங்களை பராமரிக்கவும் இஸ்ரேல் முயற்சிப்பதாகவும், இதற்கு சிரியா கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
சிரியா தனது எல்லைகளுக்குள் அனைத்து தாக்குதல்களும், ஊடுருவல்களும் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே, பிராந்திய விரிவாக்கத்தைத் தவிர்ப்பதும், ஈரானின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதும் அமெரிக்காவின் முக்கிய முன்னுரிமையாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





