இஸ்ரேல் – ஈரான் மோதல்! வான் முழுவதும் பாய்ந்த டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள்

ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரானிய பாதுகாப்பு அமைப்புகள், அணு உலை சார்ந்த நிர்வாக கட்டடங்கள் மீது இஸ்ரேலிய விமானப்படை வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியது இந்த தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவ தளபதிகள், உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 24 மணிநேரத்துக்குள்ளாக மீண்டும் நூற்றுக்கணக்கான டிரோன்களையும் இஸ்ரேல் ஏவியது.
இந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்றிரவு இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் நகரங்களை நோக்கி ஈரான் வான்வழித் தாக்குதல் நடத்தியது. ஈரான் வீசிய ஏவுகணைகளை இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்தன.
அதில் சில ஏவுகணைகள் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் விழுந்தன. இந்த சூழலில் தங்கள் நாட்டின் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேலை மண்டியிட வைப்போம் என்று ஈரானிய தலைவரான அயத்துல்லா அலி கமேனெய் தெரிவித்துள்ளார். தங்கள் நாட்டின் மீது அத்துமீறி தாக்குதல் நடத்திய குற்றத்துக்காக இஸ்ரேல் , தப்பவே முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹுவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார். இந்த பேச்சுவார்த்தையின்போது, இஸ்ரேலில் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு வழிவகுக்க வேண்டும் என்று மோடி கேட்டுக்கொண்டார்.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ரஷ்யா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்த சூழலில் அணு ஆயுத அபாயத்தை நீக்குவதே ஆபரேஷன் ரைசிங் லயன் திட்டத்தின் நோக்கம் என்று பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே இஸ்ரேலிய விமானப்படை விமானி ஒருவரை தங்கள் தரப்பு சிறைபிடித்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
எண்ணெய் வளம் மிக்க ஈரானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருப்பதால் உலகளவில் பங்குச்சந்தைகளில் பெரிய சரிவு காணப்பட்டது. மேலும் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் தங்கத்தின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.