இஸ்ரேலிய தாக்குதலுக்கு உள்ளானபோதும் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுப்பு

இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு உள்ளாகிக்கொண்டிருக்கும் வேளையில் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையைத் தொடங்கவேண்டாம் என்று ஈரான், கத்தார் மற்றும் ஓமானிடம் கூறியுள்ளதாக அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.கத்தார், ஓமான் இரண்டையும் சேர்ந்த அதிகாரிகள் இந்த விவகாரத்தில் சமரசப் பேச்சு நடத்தவிருந்தனர்.
இஸ்ரேலியத் தாக்குதல்களுக்குத் தகுந்த பதிலடி தந்த பிறகே தாங்கள் பேச்சுவார்த்தையை நடத்தப்போவதாக கத்தார், ஓமானிய சமரசப் பேச்சாளர்களிடம் ஈரான் சொன்னதாக அந்த அதிகாரி குறிப்பிட்டார். தாக்குதலுக்கு உள்ளாகிக்கொண்டிருக்கும்போது பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதில்லை என்பதை ஈரான் திட்டவட்டமாகக் கூறியுள்ளதாக அவர் எடுத்துரைத்தார். அந்த அதிகாரி தனது அடையாளத்தை வெளியிட விரும்பவில்லை.
கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 13) காலை இஸ்ரேல், ஈரான் மீது எதிர்பாரா விதமாகத் தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபத்தியத்தின் உயரியப் பிரிவினர் மட்டுமின்றி அதன் அணுவாயுத நிலையங்கள் சேதமடைந்தன. அதற்குப் பதிலடியாக ‘நரகத்தின் நுழைவாயில்கள் திறக்கப்படும்’ என்று ஈரான் இஸ்ரேலுக்கு மிரட்டல் விடுத்தது.
இதற்கிடையே, ஈரான் நடத்திய பதில் தாக்குதல்களில் காயமுற்ற பிலிப்பீன்சைச் சேர்ந்த நால்வர் இஸ்ரேலின் ரெஹோவோட் நகரில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பிலிப்பீன்ஸ் வெளியுறவு அமைச்சு இத்தகவலை வெளியிட்டது.அவர்களில் ஒருவரைத் தவிர வேறு யாரும் மோசமான காயங்களுக்கு ஆளாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே தாக்குதல்கள் தொடர்வது பெரிய கவலையாக உருவெடுத்துள்ளது. இவ்வாரம் உலகத் தலைவர்கள் கனடாவில் சந்திக்கும் வேளையில் இந்தச் சூழல் தலைதூக்கியுள்ளது.இருநாடுகளுக்கும் இடையிலான மோதல் வட்டார அளவிலான பூசலாக உருவெடுக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை முதல் ஜி7 கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் சந்திப்புக்காக கனடாவின் ராக்கி மலைகளில் கூடிவருகின்றனர். சந்திப்பில் இஸ்ரேல்-ஈரான் பூசல் விவகாரம்தான் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி7 சந்திப்பின் மூலம் அப்பூசலுக்குத் தீர்வுகாண உதவும் ஒப்பந்தத்தை வரைந்து பூசலை மோசமடையாமல் இருப்பதைப் பார்த்துக்கொள்ளத் தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக ஜெர்மனிப் பிரதமர் ஃபிரிட்ரிக் மெர்ஸ் கூறியுள்ளார்.ஜி7 சந்திப்பில் இந்த விவகாரம் மிக முக்கியமானதாகக் கருதப்படும் என்று அவர் செய்தியாளர்களிடம் சொன்னார்.