என்.பி.பி. ஆட்சிமீது சர்வதேசம் நம்பிக்கை: தொடரும் உதவி!
“ஊழல், மோசடி அற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்மீது அனைத்துலக சமூகத்துக்கு நம்பிக்கை இருப்பதால், இலங்கை மீண்டெழுவதற்கு நிச்சயம் வெளிநாட்டு உதவிகள் தொடர்ந்து கிடைக்கும்.”
இவ்வாறு அமைச்சர் சமந்த வித்யாரத்ன நம்பிக்கை வெளியிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவிகளை வழங்கிய உலக நாடுகளுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மீட்பு பணி, மருத்து சேவை, விநியோகம் என சகல வழிகளிலும் உதவிகள் கிடைக்கப்பெற்றன.
அடுத்தக்கட்டமாக மீள் கட்டுமான பணிகளை செய்ய வேண்டியுள்ளது. இதற்கான உதவிகளும் கிடைக்கப்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
சுனாமி பேரிடர் காலத்தில் இருந்த அரசாங்கம்போன்றது அல்ல தற்போதைய அரசாங்கம். ஊழல், மோசடி அற்ற தூய ஆட்சி நடக்கின்றது.
இதனால் சர்வதேச நாடுகளுக்கு முழு நம்பிக்கை உள்ளது. அதனால்தான் உதவிகள் கிடைக்கப்பெறுகின்றன.
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களும் நாட்டுக்காக உதவிகளை வழங்கிவருகின்றன. உதவிகள் முறையாக முகாமைத்துவம் செய்யப்படுகின்றன.”- என்றார் அமைச்சர் .





