தமிழகம் – புதுக்கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட பல்லவராயர் காலத்து கல்வெட்டு

பல்லவராயர் காலத்து கல்வெட்டு ஒன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
அந்த மாவட்டத்திற்குட்பட்ட இலுப்பூர் வட்டம் மாராயப்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தீபிகா, அங்குள்ள கண்டனி குளத்து வயல்வெளியில் கற்பலகை ஒன்று காணப்படுவதாகவும் அதில் பழங்கால எழுத்துகள் இருப்பதாகவும் தகவல் தெரிவித்து இருந்தார்.
அந்தத் தகவலின்பேரில், பேராசிரியர் முத்தழகன், பாண்டிய நாட்டு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர்கள் நாராயணமூர்த்தி, ராகுல் பிரசாத் ஆகியோரைக் கொண்ட குழு அங்கு சென்று ஆய்வு செய்தபோது, அந்த கற்பலகை பழங்கால பல்லவராயர் கல்வெட்டு என்பது தெரியவந்தது.
அதுகுறித்து பேராசிரியர் முத்தழகன் கூறும்போது, “மாராயப்பட்டி கண்டனி வயல்வெளி நடுவே காலமுனி கோயிலின் எல்லையாக வணங்கப்பட்டு வரும் கல் தூணுக்கு எதிரே கற்பலகை ஒன்று ஊன்றப்பட்டுள்ளதைக் கண்டோம்.
“அந்தப் பலகை மூன்றடி உயரம், இரண்டேகால் அடி அகலம் கொண்டதாக உள்ளது. அதன் ஒருபுறத்தில், ஆனந்த வருடம் ஆவணி 6ஆம் நாள் ஆரியூர் அழகிய சொக்கநாத சுவாமிக்கு சிவந்தெழுந்த பல்லவராயர், கண்டனி வயல்வெளி நிலங்களை மானியமாக வழங்கிய செய்தி எழுதப்பட்டுள்ளது.
“மேலும், இந்த நில தானத்துக்கு தீங்கு நினைப்பவர்கள் சிவதுரோகிகளாகக் கருதப்படுவர் எனவும் அந்தக் கற்பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது,” என்றார்.
கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சிவந்தெழுந்த பல்லவராயர், கி.பி. 17ஆம் நூற்றாண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளாற்றுக்கு வடக்கே உள்ள பகுதிகளை ஆட்சி செய்த பல்லவராயர் மரபின் கடைசி அரசர் ஆவார்.