ஐ.என்.எஸ் தரங்கினி கொழும்பை வந்தடைந்தது
இந்தியக் கடற்படையின் பெருமைக்குரிய அடையாளங்களில் ஒன்றான ‘ஐ.என்.எஸ் தரங்கினி’ பாய்மரக்கப்பல், தனது நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இன்று (06) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்திய – இலங்கை கடற்படைகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கோடும், இரு நாட்டு கடற்படை அதிகாரிகளுக்கும் இடையிலான பயிற்சிப் பரிமாற்றங்களை மேம்படுத்தும் நல்லெண்ண அடிப்படையிலான இந்த விஜயம் அமைந்துள்ளது.
திருகோணமலை துறைமுகத்தில் கடந்த 27 ஆம் திகதி முதல் மார்ச் 02 வரையிலான தனது முதற்கட்ட விஜயத்தை மேற்கொண்டு, அங்கிருந்து இலங்கை கடற்படை வீரர்களுக்கான கடல்வழிப் பயிற்சியுடன் மார்ச் 06 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தது.
இந்த ‘ஐ.என்.எஸ் தரங்கினி’ பாய்மரக் கப்பாலானது எதிர்வரும் 09 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும்.
“எப்போதும் உற்சாகத்துடன்” (Always Spirited) என்ற தாரக மந்திரத்தைக் கொண்ட இந்தியக் கடற்படையின் ஐ.என்.எஸ் தரங்கினி, 1997 ஆம் ஆண்டு கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. இக்கப்பல் கடந்த 28 ஆண்டுகளாக கடற்படை வீரர்களுக்குச் சிறந்த பயிற்சித் தளமாக விளங்கி வருகிறது.
இக்கப்பல் ஏனைய நவீன போர்க்கப்பல்களைப் போலன்றி, முழுமையாக பாய்மரங்களின் உதவியுடன் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 10,000 சதுர அடி பரப்பளவைக் கொண்ட பாய்மரங்கள் காற்றைப் பிடித்து கப்பலை முன்னோக்கிச் செலுத்துகின்றன.




