இலங்கை – நீதிமன்ற வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் மரணம் தொடர்பில் வெளியான தகவல்!

புதுக்கடை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ குறித்த மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அளுத்கடே நீதித்துறை வளாகத்தில் உள்ள 5 ஆம் எண் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர் வேடமணிந்து வந்த இருவர் குறித்த கொலையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க , துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், வழக்கறிஞர் வேடமணிந்து, நீதிமன்றத்திற்குள் வெறுங்கையுடன் நுழைந்து, பின்னர் சம்பந்தப்பட்ட பெண்ணிடமிருந்து துப்பாக்கியைப் பறித்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார்.
வழக்கறிஞர்கள் பயன்படுத்தும் ‘குற்றவியல் நடைமுறைச் சட்டம்’ என்ற புத்தகத்தின் பக்கங்களை குற்றவாளிகள் மிக நுணுக்கமாக வெட்டி துப்பாக்கியின் வடிவத்தில் நீதிமன்ற அறைக்குள் கொண்டு வந்ததாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் கூறினார்.
இதேவேளை கணேமுல்ல சஞ்சீவை பரிசோதனை செய்த கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ருக்ஷன் பெல்லனா, குறித்த நபரின் மார்பில் துப்பாக்கிச் சூடு பாய்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.
கொலை, கொள்ளை, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் துப்பாக்கிகளை வைத்திருத்தல் உள்ளிட்ட பல குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ, 2023 ஆம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியளில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.