இலங்கையில் கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு வெளியான தகவல்

கடவுச்சீட்டு விண்ணப்பத்தை ஒப்படைப்பதை துரிதப்படுத்துவதற்கும் எந்தவொரு இடைத்தரகருக்கும் பணம் கொடுப்பதனை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
விரைவாக கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்கும் பணம் செலுத்த வேண்டாம் என, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொதுமக்களைக் கோரியுள்ளது.
அதற்கமைய, கடவுச்சீட்டுக்காக செலுத்த வேண்டிய கட்டணத்தைத் திணைக்களத்தின் சிறாப்பர் கருமபீடத்தில் மாத்திரம் செலுத்தி, பற்றுச்சீட்டை பெற்றுக்கொண்டு, கடவுச்சீட்டு விநியோக கருமபீடத்தில் மாத்திரம் கடவுச்சீட்டை பெற்றுகொள்ள, நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூன் 2 ஆம் திகதி முதல், பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில், ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ் கடவுச்சீட்டு வழங்குவதற்கான, டோக்கன் அட்டைகள் வழங்கும் பணி காலை 6.30 முதல் பிற்பகல் 2 மணி வரை முன்னெடுக்கப்படுகின்றன.
அத்துடன், ஒரு நாள் சேவைக்காக அன்றைய தினத்துக்கு, நேர முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களும், அவசர அல்லது முன்னுரிமை தேவைகளைக் கொண்ட விண்ணப்பதாரர்களும், இந்த காலப்பகுதியினுள் ஒரு நாள் சேவையின் கீழ் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.
இதனிடையே, குறித்த காலப்பகுதியில் கடவுச்சீட்டு பெறுவதற்கு வருகைதரும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும், டோக்கன் அட்டைகள் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, முதல் நாள் இரவிலிருந்து, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் முன், வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை.
உரிய நாளில் காலை 6 மணிக்குப் பின்னர் வந்து, அனைத்து தேவைகளையும், இடையூறு இல்லாமல் பூர்த்தி செய்ய முடியும் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.