இந்தியா – குஜராத்தில் கனமழையால் 25 மாவட்டங்களில் கடும் பாதிப்பு; 22 பேர் உயிரிழப்பு

விமான விபத்தை அடுத்து, குஜராத் மாநிலத்தை கனமழை ஆட்டிப் படைத்து வருகிறது.கடந்த புதன்கிழமையுடன் (ஜூன் 18) முடிவடைந்த 48 நேரத்தில், அம்மாநிலத்தில் கனமழை, வெள்ளம் காரணமாக 22 பேர் உயிரிழந்துவிட்டனர்.
மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்து வரும் நிலையில், மாநில நிர்வாகமும் தேசியப் பேரிடர் மீட்புப் படைகளும் பல்வேறு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
ஜூனாகத், துவாரகா, போர்பந்தர், அம்ரேலி, ராஜ்கோட், பாவ்நகர், கட்ச், வல்சாத், காந்திநகர், சூரத், படான் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரு நாள்களாக நீடித்துவரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மொத்தம் 25 மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.குறிப்பாக, தெற்கு மாவட்டங்களில், மழைப்பொழிவு வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.சூரத், பாருச், வல்சத் உள்ளிட்ட பகுதிகளுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் அகமதாபாத்துக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் பெரும்பாலும் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. டாங்ஸ் மாவட்டத்தில் உள்ள அஹ்வா பகுதியில் ஆக அதிகமாக, 182 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
பல ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, கரையோர மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும், புதன்கிழமை (ஜூன் 18) வரை பதிவான பல்வேறு சம்பவங்களில் 22 பேர் உயிரிழந்து விட்டனர்.
பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பொடாட் மாவட்டத்தில் ஆற்று வெள்ளத்தில் ஒரு கார் அடித்துச் செல்லப்பட்டது. அதில் இருந்த நான்கு பேர் உயிரிழந்தனர்.மேலும் இரு சம்பவங்களில், மூன்று பேர் மாயமாகிவிட்டதாக தேசியப் பேரிடர் மீட்புப் படை தெரிவித்தது.மீட்பு, நிவாரணப் பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.