இந்தியா- பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் ஐவர் பலி

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 29 பேர் படுகாயம் அடைந்தனர்.
இச்சம்பவம் பஞ்சாப் மாநிலத்தின், ஸ்ரீ முக்த்சர் சாஹிப் மாவட்டத்தில் உள்ள சிங்கேவாலா கிராமத்தில் வியாழக்கிழமை (மே 29) நள்ளிரவில் நிகழ்ந்தது.
விபத்தில் உயிரிழந்த ஐந்து பேரும் புலம்பெயர் தொழிலாளர்கள் எனத் தெரியவந்துள்ளது.
வியாழக்கிழமை நள்ளிரவு ஏறக்குறைய ஒரு மணியளவில் அந்தப் பட்டாசு ஆலையில் பெரும் வெடிச்சத்தம் கேட்டது. இதையடுத்து, ஆலை முழுவதும் மளமளவென தீ பரவியது.
பின்னர் கட்டடம் முற்றிலும் இடிந்து விழுந்து தரைமட்டமானது என்றும் அதன் இடிபாடுகளில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்துவிட்டனர் என்றும் காவல்துறை தெரிவித்தது.
மீட்புப் பணிகள் வெள்ளிக்கிழமை (மே 30) பிற்பகல் வரை நீடித்தது. விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
காயமடைந்த அனைவரும் பதிண்டா மற்றும் முக்த்சரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.