இந்தியா – இங்கிலாந்து கடைசி டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின் தங்கி உள்ளது. மான்செஸ்டரில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் அபாரமாக செயல்பட்டு ஆட்டத்தை டிராவில் முடித்தனர்.
ஆல்ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சதம் விளாசி இங்கிலாந்து அணியின் ஒட்டுமொத்த பந்து வீச்சு திட்டங்களை யும் கடும் சிதைவுக்கு உட்படுத்தியிருந்தனர். இந்த போட்டியில் ரன் கணக்கை தொடங்கும் முன்னரே 2 விக்கெட்களை இந்திய அணி பறிகொடுத்து நம்பிக்கையற்ற நிலையில் இருந்த போதிலும் கே.எல்.ராகுல், ஷூப்மன் கில் ஜோடி அபாரமாக ஆட்டத்தை முன்னெடுத்துச் சென்றிருந்தது.
அவர்களது போராட்ட குணத்தை பின்பற்றி ஜடேஜாவும், வாஷிங்டன் சுந்தரும் அபாரமாக செயல்பட்டு ஆட்டத்தை டிராவில் முடிக்க பெரிதும் உதவினர். போட்டி டிராவில் முடிவடைந்த போதிலும் இந்திய அணியின் செயல் திறன் வெற்றிக்கு நிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே டெஸ்ட் தொடரை சமன் செய்ய முடியும் என்ற நெருக்கடியான சூழ்நிலையில் இந்திய அணி களமிறங்குகிறது. இந்த தொடரில் முதல் 4 போட்டிகளுமே கடைசி நாளில் கடைசி செஷன் வரை பரபரப்பாக இருந்தது. இதனால் கடைசி டெஸ்ட் போட்டியும் ரசிகர்களுக்கு விருந்ததாக அமையக்கூடும். யஷஸ்வி ஜெய்ஸ்வால் கடந்த போட்டியில் ஏமாற்றம் அளித்தார். இந்த போட்டி முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்துவதில் அவர், முனைப்பு காட்டக்கூடும்.
மான்செஸ்டர் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அரை சதம் அடித்த சாய் சுதர்சன், 2-வது இன்னிங்ஸில் தனது விக்கெட்டை பொறுப்பின்றி செயல்பட்டு இழந்திருந்தார். அணியில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்றால் அவர், சிறப்பான செயல் திறனை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். பந்து வீச்சில் ஒரு சில மாற்றங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது.
தொடரை சமன் செய்வதற்கான முக்கியமான போட்டி என்றபோதிலும் பணிச்சுமையை கருத்தில் கொண்டு ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்படக்கூடும். அவருக்கு பதிலாக முழு உடற்தகுதியை எட்டி உள்ள ஆகாஷ் தீப் களமிறங்கக்கூடும். மேலும் அன்ஷுல் கம்போஜ் நீக்கப்பட்டு அர்ஷ்தீப் சிங் அல்லது குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும்.
பேட்டிங்கில் 4 சதங்களுடன் 722 ரன்கள் வேட்டையாடி உள்ள ஷுப்மன் கில் மீண்டும் ஒரு சிறந்த இன்னிங்ஸை வெளிப்படுத்தக்கூடும். இந்த போட்டியில் ஷுப்மன் கில் மேற்கொண்டு 52 ரன்கள் சேர்த்தால் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார். இந்த வகை சாதனையில் சுனில் கவாஸ்கர் கடந்த 1970-71-ம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் 744 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார்.
அதேவேளையில் சுனில் கவாஸ்கரின் மற்றொரு சாதனையையும் ஷுப்மன் கில் முறியடிக்க வாய்ப்பு உள்ளது. இந்திய அணியின் கேப்டனாக1978-79-ம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுனில் கவாஸ்கர் 732 ரன்கள் குவித்திருந்தார். ஒரு டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் குவித்த அதிகபட்ச ரன்களாக இது உள்ளது. இந்த சாதனையை முறியடிக்க ஷுப்மன் கில்லுக்கு மேற்கொண்டு 11 ரன்களாக தேவையாக உள்ளன.
இதேபோன்று 511 ரன்கள் குவித்துள்ள கே.எல்.ராகுலிடம் இருந்து சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். ஆல்ரவுண்டர்களாக ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் கடந்த ஆட்டத்தில் சதம் விளாசியதன் மூலம் மிகுந்த நம்பிக்கையுடன் செயல்படக்கூடும். ரிஷப் பந்த் காயம் காரணமாக விலகி உள்ளதால் அவரது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக துருவ் ஜூரெல் களமிறங்குவார்.
இங்கிலாந்து அணியில் தோள்பட்டை காயம் காரணமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விலகி உள்ளார். இது அந்த அணிக்கு பின்னடைவை கொடுக்கக்கூடும். பெஸ் ஸ்டோக்ஸ் விளையாடாததால் ஆலி போப் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஜோப்ரா ஆர்ச்சர், பிரைடன் கார்ஸ், லியாம் டாவ்சன் ஆகியோர் நீக்கப்பட்டு ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஓவர்டன், ஜோஷ் டங்க் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வேகங்களுக்கு முக்கியத்துவம்: இங்கிலாந்து அணியின் லெவனில் முழுமையாக வேகப்பந்து வீச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கிறிஸ் வோக்ஸ், ஜோஷ் டங்க், கஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன் ஆகியோர் பிரதான வேகப்பந்து வீச்சாளர்களாக இடம் பெற்றுள்ளனர். அதேவேளையில் பிரதான சுழற்பந்து வீச்சாளர் சேர்க்கப்படவில்லை. இதனால் ஜோ ரூட்டுடன் ஆல்ரவுண்டரான ஜேக்கப் பெத்தேல் சுழற்பந்து வீச்சில் கைகொடுக்கக்கூடும்.
‘ஸ்டோக்ஸ் இல்லாதது இங்கிலாந்துக்கு இழப்பு’: இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் கூறும்போது, “ஜஸ்பிரீத் பும்ரா களமிறங்கும் விஷயத்தில் போட்டி தொடங்குவதற்கு முன்னர் முடிவு எடுப்போம். ஆடுகளம் மிகவும் பசுமையாக உள்ளது. இதனால் அது எப்படி செயல்படுகிறது என்பதை பார்க்க வேண்டும். பென் ஸ்டோக்ஸ் விளையாடாதது இங்கிலாந்து அணிக்கு நிச்சயம் பெரிய இழப்புதான். அவர் எப்போது பந்து வீசினாலும், பேட்டிங் செய்தாலும் ஏதேனும் ஒன்றை நிகழச் செய்வார். எனவே அவர்களின் பார்வையில், இது நிச்சயமாக இழப்புதான்.
அர்ஷ்தீப் சிங்கை தயாராக இருக்கும்படி கூறியுள்ளோம். ஆனால், ஆடுகளத்தைப் பார்த்த பிறகே விளையாடும் லெவன் குறித்து முடிவெடுப்போம். தொடரை 2-2 என நாங்கள் நிறைவு செய்தால் சிறப்பானதாக இருக்கும். நாங்கள் விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும், முதல் நான்கு நாட்களுக்குப் பிறகு வெற்றியாளரைத் தீர்மானிப்பது கடினமாக இருந்தது. இந்தத் தொடர் எங்களுக்கு கற்றல் அனுபவத்தை கொடுத்துள்ளது. அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய சில விஷயங்கள் உள்ளன. தொடரை வெற்றியுடன் நிறைவு செய்வோம் என்று நம்புகிறேன்” என்றார்.