ரஷ்யாவிடமிருந்து S-400 ஏவுகணை அமைப்புகளை கூடுதலாக வாங்க இந்தியா முடிவு

அமெரிக்காவின் வரிவிதிப்பு சிக்கலை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரஷ்யாவிடம் இருந்து ‘எஸ்-400’ வகை வான்பாதுகாப்பு அமைப்பை கூடுதலாக வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.இதுதொடர்பாக, இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்ற வருவதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவிடம் இருந்து, குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதால் இந்தியாவுக்கு அபராதமாக, 25% கூடுதல் வரிவிதித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இதனால் இந்திய வர்த்தகர்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்திய போதிலும், அதற்கு இந்தியா அடிபணியவில்லை என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளார்.
இதனிடையே, இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் சலுகை விலையை மேலும் குறைக்க ரஷ்யா முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.இது அமெரிக்க தரப்பின் கோபத்தை மேலும் அதிகரிக்கக்கூடும எனத் தெரிகிறது.
ஏற்கெனவே ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என இந்தியாவுக்குத் தீவிர அழுத்தம் கொடுத்தது அமெரிக்கா.இந்நிலையில், இந்தியாவுக்கான ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலையில் மேலும் மூன்று அல்லது நான்கு அமெரிக்க டாலர் தள்ளுபடியை ரஷ்யா அறிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில், சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புட்டின், சீன அதிபர் ஸி ஜின்பிங் ஆகியோரைச் சந்தித்துப் பேசியது அனைத்துலக அரங்கில் கவனம் பெற்றுள்ளது.
இத்தகைய சூழலில், அமெரிக்காவின் கடும் எதிர்ப்பை மீறி, ரஷ்யாவின் ‘எஸ்-400 டிரயம்ப்’ வான்பாதுகாப்பு அமைப்பைக் கூடுதலாக வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.கடந்த 2018ஆம் ஆண்டு இதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. அதன்படி, ஐந்து ‘எஸ்-400 டிரயம்ப்’ வான்பாதுகாப்பு அமைப்பை இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முன்வந்தது.
இந்நிலையில், மேலும் இரண்டு ‘எஸ்-400 டிரயம்ப்’ அமைப்பை வாங்குவது தொடர்பாக இந்தியா தற்போது ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ரஷ்ய ராணுவ கூட்டமைப்பின் தலைவர் திமிட்ரி ஷுகயேவ் கூறியுள்ளார்.
ஏற்கெனவே, இந்த வான்பாதுகாப்பு அமைப்பு இந்தியாவில் பயன்பாட்டில் இருந்தாலும், கூடுதலாக இந்த அமைப்பைப் பெற இந்தியா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.அண்மையில் காஷ்மீர் எல்லையில் மேற்கொண்ட ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது, ரஷ்யாவின் ‘எஸ்-400’ வான்பாதுகாப்பு அமைப்பைத்தான் இந்திய ராணுவம் அதிகம் பயன்படுத்தியது.