இந்தியா – தேர்வில் மோசடி செய்ய உதவ மறுத்த சக மாணவனைச் சுட்டுக்கொன்ற 10ஆம் வகுப்பு மாணவன்

பீகாரில் பள்ளி ரோத்தாஸ் மாவட்டம் சசாரமில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு நடந்தது. தேர்வில் மோசடி செய்ய உதவாத இரு மாணவர்களிடம் சக மாணவர் ஒருவர் மோதலில் ஈடுபட்டார். பிப்ரவரி 20ஆம் திகதி இச்சம்பவம் நடந்தது.
சம்பவத்தன்று மாலை தேர்வு முடிந்த பின்னர் மாணவர்கள் ஆட்டோ ஒன்றில் வந்துள்ளனர். அம்மாணவர்களை நோக்கி தேர்வில் முறைகேடு செய்ய முயன்ற மாணவர் துப்பாக்கிசூடு நடத்தினார்.
இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் இருவர் குண்டு பாய்ந்து காயமடைந்தனர்.
துப்பாக்கியால் 10ஆம் வகுப்பு மாணவர் சுட்டு கொல்லப்பட்டதைக் கண்டித்து தேசிய நெடுஞ்சாலையில் மாணவரின் உடலுடன் அவரது பெற்றோர், பொதுமக்கள் ஆகியோர் மறியலில் ஈடுபட்டனர்.
காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. தனது உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட மாணவரைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.