இந்தியாவில் குடிபோதையில் மணப்பெண்ணுக்கு பதிலாக தோழிக்கு மாலையிட்ட மணமகன்

உத்தரப்பிரதேசத்தில் திருமணத்திற்கு குடிபோதையில் வந்த மணமகன், மணப்பெண்ணுக்குப் பதிலாக அவரது தோழிக்கு மாலை அணிவித்ததால் திருமணத்தை மணப்பெண் நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது.
இச்சம்பவத்தைக் குறித்த காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
பிப்ரவரி 22ஆம் திகதி பிரம்மாண்டமாக நடந்த திருமணவிழாவில் மணமகனும் மணமகளும் மாலை மாற்றிக்கொள்வதற்காக மேடைக்கு வந்தனர்.
குடிபோதையில் இருந்த மணமகன் மணமகளின் கழுத்தில் மாலை அணிவிப்பதற்கு பதிலாக மணமகளின் நெருங்கிய தோழிக்கு மாலை அணிவித்துவிட்டார். இதனால், கோபமடைந்த மணமகள் திருமணத்தை நிறுத்துமாறு தனது பெற்றோரிடம் கூறினார்.
திருமணம் நிறுத்தப்பட்டதோடு மணமகளின் தந்தை மணமகனின் குடும்பத்தினர் மீது வரதட்சனை துன்புறுத்தல், மான நஷ்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் புகார் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மணமகனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் காவல்துறையினர் அபராதம் விதித்தனர். மணமகன், அவரது தந்தை மற்றும் மூன்று குடும்ப உறுப்பினர்கள் உட்பட மொத்தம் ஐவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.