ஐ.எம்.எப். ஒப்பந்தம் மறுசீரமைக்கப்பட வேண்டும்: சஜித் வலியுறுத்து!
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் செயல்முறை அரசியல் மயப்படுத்தப்படக்கூடாது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று (11) வலியுறுத்தினார்.
“ நிவாரணங்களை பெறுவதற்கு அரச அதிகாரிகள் மாத்திரமின்றி “பிரஜா சக்தி” போன்ற சமூகக் குழுக்களின் சான்றுபடுத்தலையும் கோருவது ஏற்புடையது அல்ல.
இது நிவாரண பணிகளை வேறொரு திசையை நோக்கி நகர்த்தும் நடவடிக்கையாகும்.
எனவே, தூய்மையான பொறுப்புணர்வுள்ள பொறிமுறையொன்றை செயல்படுத்த வலியுறுத்துகின்றோம்.” எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
“ நாட்டின் இடர் முகாமைத்துவ செயல்முறை குறித்து ஆழமானதொரு ஆய்வு நடத்தப்பட வேண்டும்.
ஒவ்வொரு அம்சத்திலும் இடர் முகாமைத்துவ செயல்முறையில் பெரும் பலவீனங்கள் காணப்படுகின்றன. தவறுகளையும் குறைபாடுகளையும் சரிசெய்து கொள்ள வேண்டும்.
அதேவேளை, அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேசி, தற்போதுள்ள ஒப்பந்தத்தை மாற்றி, நாட்டிற்கும் மக்களுக்கும் ஏற்பட்டுள்ள அழுத்தத்தைக் குறைக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் மேலும் கூறினார்.





