அதிபர் புடினால் நான் ‘ஏமாற்றமடைந்தேன், ஆனால் இன்னும் முடியவில்லை’ ; டிரம்ப்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினால் ஏமாற்றமடைந்துள்ளதாகச் சொன்ன அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், புட்டினுடனான விவகாரம் இன்னும் முடியவில்லை என்று கூறியுள்ளார்.
“புட்டினால் எனக்கு வருத்தமாக இருக்கிறது. ஆனால் அவருடனான விவகாரம் இன்னும் முடியவில்லை,” என்று டிரம்ப் கூறினார்.“புட்டினுடன் ஆக்ககரமான உரையாடல் நடைபெறும். அது நல்லது. போர் நிறுத்தத்தை எட்டுவதை நெருங்குகிறோம் என்று கூறிய பின் உக்ரேனில் அவர் ஒரு கட்டடத்தை இடித்துவிடுவார்,” என்று டிரம்ப் குறிப்பிட்டார்.
உக்ரேனுடனான போரைத் புட்டின் அடுத்த 50 நாள்களுக்குள் நிறுத்தாவிட்டால் ரஷ்யாமீது இரண்டாவது முறையாக 100% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.மேலும், அதிநவீன ஆயுதங்களை நேட்டோ நாடுகள் மூலம் உக்ரேனுக்கு அமெரிக்கா அனுப்பி வைக்கப்போவதாகவும் அவர் அறிவித்தார்.
“உக்ரேன் செய்ய விரும்புவதைச் செய்யவேண்டும்,” என்று டிரம்ப் நேட்டோ தலைவர் மார்க் ருட்டெவுடன் நடைபெற்ற சந்திப்பிற்குப் பின் கூறினார்.உக்ரேனுக்கு ஆதரவளிக்க பல பில்லியன் டாலர் மதிப்பிலான உயர் ரக ஆயுதங்களைத் துரிதமாகப் போர் களத்திற்கு விநியோகம் செய்யப்போவதாக டிரம்ப் குறிப்பிட்டார்.
உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி ஆதரவு தர முன்வந்ததற்காக அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்தார்.இதற்கிடையே, ரஷ்யாவுடனான வர்த்தகத்தைத் தொடரும் இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் உள்பட பிரிக்ஸ் அமைப்பைச் சேர்ந்த அனைத்து நாடுகளும் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ளக்கூடும் என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் லின்ட்சே கிரெஹம், ரிச்சர்ட் புளுமெந்தால் ஆகியோர் குறிப்பிட்டனர்.
வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அந்த இருவரும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இவ்வாண்டு தொடக்கத்தில் புதிய மசோதாவை அறிமுகம் செய்தனர்.
ரஷ்யாமீது கடுமையான வர்த்தகத் தடைகளை முன்வைக்கும் அந்த மசோதாவை 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தனர்.போரை நிறுத்தும்படி புட்டினுக்கு அந்த மசோதா வலுவான நெருக்குதலை அளிக்கக்கூடும் என்று அவர்கள் தெரிவித்தனர்.புட்டினின் போரைத் தூண்டக்கூடிய இந்தியா, சீனா, பிரெசில் ஆகிய இதர நாடுகளையும் முடக்க மசோதா கைகொடுக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.