பங்களாதேஷின் கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி!
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் தமது அணி பங்கேற்கும் போட்டிகளை இந்தியாவுக்கு வெளியே நடத்துமாறு பங்களாதேஷ் அணி விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி ICC எனப்படுகின்ற சர்வதேச கிரிக்கெட் சபையாலேயே மேற்படி கோரிக்கை இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷில் இந்துக்கள்மீதான தாக்குதலுக்கு இந்தியா போர்க்கொடி தூக்கியுள்ளது. தாக்குதல் தொடர்வதால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் சபை விடுத்த கோரிக்கையின் பிரகாரம், இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாட இருந்த பங்களாதேஷ் வீரர் முஸ்தபிஜுர் ரஹ்மான் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இது தொடர்பில் பங்களாதேஷ் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. ஐ.பி.எல். போட்டிகளை அங்கு ஒளிபரப்புவதற்கு தடை விதிக்கப்பட்டது.
மேலும், டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியாவுக்கு பங்களாதேஷ் அணி வராது என்றும் தெரிவித்தது.
டி20உலகக்கிண்ண தொடரில் பங்களாதேஷ் அணி விளையாடும் போட்டிகளை இந்தியாவுக்கு வெளியே பொதுவான மைதானத்தில் நடத்துமாறு ஐசிசியிடம் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை கோரிக்கை விடுத்தது.
இது தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
எனவே, போட்டி அட்டவணைப்படி, பங்களாதேஷ் அணி இந்தியாவில் தான் விளையாட வேண்டும் என்றும், அப்படி இல்லையெனில், புள்ளிகளை இழக்கநேரிடும் என்று எச்சரித்துள்ளது.





