ஜப்பானில் திருமணமாகி 20 ஆண்டுகளாக ஒரு வார்த்தையேனும் பேசாத கணவன் – மனைவி

ஜப்பானில் திருமணமாகி 20 ஆண்டுகள் கடந்த போதிலும் ஒருவருக்கொருவர் ஒருவார்த்தைகூட பேசிக்கொள்ளாத தம்பதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கணவன் மனைவி நாரா வட்டாரத்தைச் சேர்ந்தவர்களாகும். திருமணமான நாளிலிருந்து கணவரிடம் பேச மனைவி முயற்சி செய்துள்ளார்.
ஆனால் கணவர் பேசாமல் தலையசைப்பது உள்ளிட்ட பாவனை மொழிகளை மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளார்.
எனினும் அவரை விட்டுப் பிரியும் எண்ணம் மனைவிக்கு இருந்ததில்லை என்று ஊடகங்கள் கூறுகின்றன.
மனைவியின் கவனமெல்லாம் பிள்ளைகள் மேல் எனவும் தம்மீது இல்லை என்றும் கருதியதால் மனைவியிடம் பேசுவதில்லை என கணவர் தெரிவித்துள்ளார்.
அதனைச் சரிப்படுத்த அவர்களின் பிள்ளைகள் முயன்றனர். அதற்காக உள்ளூர்த் தொலைக்காட்சி நிறுவனத்தின் உதவியைப் பிள்ளைகள் நாடியுள்ளனர்.
நிறுவனம் தம்பதிக்கு இடையே சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்தது. அவர்கள் தனிமையில் பூங்காவொன்றில் சந்தித்தனர்.
அவர்களுக்குத் தெரியாமல் பிள்ளைகளும் தொலைக்காட்சி ரசிகர்களும் அவர்களைப் பார்த்து ரசித்தனர். அச்சந்திப்பில் மௌனம் கலைத்து மனைவியிடம் பேசிய கணவர் தமது செயலுக்காக மன்னிப்புக் கேட்டார்.
20 ஆண்டுகளாகத் தம்மை விட்டுப் பிரியாமல் இருந்த மனைவிக்கு நன்றி தெரிவித்தார்.