நியூயார்க் நகரில் உள்ள ICE தலைமையகத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் போராட்டம்

அமெரிக்காவின் நியூயார்ப் நகரில் உள்ள குடிநுழைவு, சுங்கத்துறை அமலாக்க (ICE) நிலையத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.லோவர் மேன்ஹேட்டன் பகுதியில் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சட்டவிரோதக் குடியேறிகள் என்று கூறப்படுவோர் மீது எடுத்துவரும் கடும் நடவடிக்கைக்கு எதிராகக் கடந்த சில நாள்களாக லாஸ் ஏஞ்சிலிஸ் நகரில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன. ஆர்ப்பாட்டங்கள் இப்போது லாஸ் ஏஞ்சலிசுக்கு 3,850 கிலோமீட்டருக்கும் அதிக தொலைவில் இருக்கும் நியூயார்க்கிலும் வெடித்துள்ளன.
ஃபோலி ஸ்குவேர் பகுதியில் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் அமெரிக்க குடிநுழைவு அலுவலகங்கள், நியூயார்க் நகரின் முக்கிய குடிநுழைவு நீதிமன்றம் ஆகியவை உள்ள கட்டடத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கிடையே, லாஸ் ஏஞ்சலிஸ் நகரம் மட்டுமின்றி அதன் சுற்று வட்டாரங்களிலும் அமெரிக்காவின் தேசியக் காவற்படையினர் குடிநுழைவு, சுங்கத்துறை அமலாக்க அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு அளித்துவருகின்றனர். டிரம்ப், இவ்வாரம் தேசிய காவற்படையினரைப் பணியில் ஈடுபடுத்திய பிறகு அவர்கள் கூடுதல் இடங்களில் செயல்படுகின்றனர்.
மத்திய சட்ட அமலாக்கத்துறைகளுக்குத் தாங்கள் பாதுகாப்பு அளித்துவருவதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் ட்ரிஷியா மெக்லோலின் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) தெரிவித்தார். ஆர்ப்பாட்டக்காரர்கள் குடிநுழைவு, சுங்கத்துறை அமலாக்க அதிகாரிகளைத் தாக்கினால் சட்ட ஒழுங்கு அதிகாரிகள், அவர்களைக் கைது செய்யும் வரை அவர்களைத் தற்காலிகமாகத் தடுத்துவைக்க ராணுவ வீரர்களுக்கு அதிகாரம் உள்ளது என்று மெக்லாலின் குறிப்பிட்டார்.
“குடிநுழைவு, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு எதிரான வன்முறை முடிவுக்கு வரவேண்டும்,” என்றார் அவர். மத்திய அரசாங்கச் சொத்துகளைப் பாதுகாக்க ராணுவ வீரர்கள் உதவிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதிகாரிகள் குடிநுழைவு தொடர்பான கைது நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தபோது படைகள் பாதுகாப்பு அளிப்பதைக் காட்டும் இரண்டு படங்களைக் குடிநுழைவு, சுங்கத்துறை அமலாக்க நிலையம் எக்ஸ் தளத்தல் பதிவேற்றம் செய்தது. சுற்றுச்சூழலுடன் இணைந்தபடி அடையாளம் காண முடியாத வகையில் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் ஆயுதங்களை வைத்தபடி நின்றுகொண்டிருந்தபோது சந்தேக நபர்கள் இருவர் கைகளில் விலங்கு மாட்டப்பட்டதும் அப்படங்களில் தெரிந்தது.