ஹமாஸ் பயங்கரவாத முகாம்களாக பயன்படுத்தப்பட மருத்துவமனைகள் … வீடியோ ஆதாரம் வெளியிட்டது இஸ்ரேல்!
காசாவில் மருத்துவமனைகள் என்ற பெயரில் அவற்றின் கீழே சுரங்கங்கள் அமைத்து ஹமாஸ் பயங்கரவாத முகாமாக பயன்படுத்தி வந்ததாக இஸ்ரேல் வீடியோ வெளியிட்டு மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது.
ஹமாஸுக்கு எதிரான போர் பிரகடனத்தை வெளியிட்டதிலிருந்து எதிர்தாக்குதல் திட்டமிடலுக்காக காசாவில் உள்ள மருத்துவமனைகளை ஹமாஸ் பயன்படுத்தி வருவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது இஸ்ரேல். காசாவின் அல் ஷிபா மருத்துவமனையின் பரந்து விரிந்த அடிப்பரப்பில் சுரங்கம், பதுங்கு குழிகளில் ஹமாஸ் தனது கட்டுப்பாட்டு மையத்தை அமைத்திருந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசியிருக்கும் இஸ்ரேல் ராணுவப் படை (IDF) செய்தி தொடர்பாளர் அட்மிரல் டேனியல் ஹக்காரி, “காசா மருத்துவமனை பயங்கரவாத முகாமாக பயன்படுத்தப்பட்டது. ஹமாஸ் தனது நோக்கத்தை நிறைவேற்றி கொள்வதற்காக மருத்துவமனைகளை கேடயமாக பயன்படுத்துகிறது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் தான் போர். காசாவில் உள்ள மக்களுடன் அல்ல. அந்நகரில் உள்ள மருத்துவமனைகளுக்கு அடியில் ஹமாஸ் சுரங்கங்களை அமைத்து, தாக்குதல் திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது” என தெரிவித்துள்ளார்.
தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிபா மருத்துவமனையின் அடிப்பகுதியில் ஹமாஸ் நிறுவியிருந்த சுரங்கம் குறித்த வீடியோ காட்சிகளை இஸ்ரேல் நேற்று வெளியிட்டது. இந்த வீடியோ காட்சிகள் வெளிநாட்டு செய்தியாளர்கள் வசமும் வழங்கப்பட்டது. அந்த வீடியோவில் கற்களைக் கொண்டு 150 மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள சுரங்கத்தின் முடிவில் குடியிருப்புகள் உள்ளன. அவற்றில் குளிர்சாதன வசதி, சமயலறை, குளியலறை, ஸ்டீல் கட்டில் ஆகியவை உள்ளன.
மருத்துவமனையை பயங்கரவாத தாக்குதல் திட்டத்துக்கான கேடயமாக ஹமாஸ் பயன்படுத்தி வருவதை உலக நாடுகள் கவனிக்க வேண்டும் என இஸ்ரேல் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.