இஸ்ரேலிய நகரங்கள் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்திய ஹமாஸ்

இஸ்ரேலின் தென்பகுதியில் உள்ள நகரங்களை நோக்கி ஹமாஸ் அமைப்பு பல ராக்கெட்டுகளைப் பாய்ச்சியுள்ளது.இத்தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) நடத்தப்பட்டது.
காஸா மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்குப் பதிலடி தரும் வகையில் ராக்கெட்டுகள் பாய்ச்சப்பட்டதாக ஹமாஸ் கூறியது.கிட்டத்தட்ட பத்து ராக்கெட்டுகள் பாய்ச்சப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது.ஆனால் அவற்றில் பெரும்பாலானவை சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இஸ்ரேலின் ஆஷ்கெலோன் நகரில் ராக்கெட் சேதங்களை ஏற்படுத்தியதாக இஸ்ரேலியத் தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டது.காயமடைந்த ஒருவருக்கு சிகிச்சை அளித்ததாக இஸ்ரேலிய அவசரகால சேவைப் பிரிவு கூறியது.
கார் கண்ணாடிகள் நொறுங்கியதாகவும் கண்ணாடித் துண்டுகள் சாலைகளில் கிடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.இதற்கிடையே, காஸா முனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 39 பேர் உயிரிழந்து விட்டதாக பாலஸ்தீனச் சுகாதகாரத்துறை அதிகாரிகள் கூறினர்.
ஹமாஸ் நடத்திய ராக்கெட் தாக்குதலுக்குப் பிறகு, காஸாவில் உள்ள சில பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்குப் புதிய வெளியேற்ற உத்தரவை இஸ்ரேலிய ராணுவம் எக்ஸ் தளத்தில் பிறப்பித்தது.
தாக்குதல் நடத்துவதற்கு முன்பு காஸா மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அவர்கள் அங்கிருந்து வெளியேற வாய்ப்பு அளிக்கப்பட்டதாகவும் இஸ்ரேலிய ராணுவம் கூறியது.
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்கு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு சென்றுகொண்டிருந்தபோது பதிலடி தாக்குதல் குறித்த விவரங்களை இஸ்ரேலியத் தற்காப்பு அமைச்சு அவரிடம் தெரிவித்ததாக அறியப்படுகிறது.
வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை நெட்டன்யாகு சந்தித்துப் பேச இருக்கிறார்.ஹமாஸ் அமைப்புக்கு எதிராக மிகக் கடுமையான பதிலடி தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் நெட்டன்யாகு தமது ராணுவத்துக்கு உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஹமாஸ் அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளை இஸ்ரேலிய ராணுவம் தொடர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.