உத்தரபிரதேசத்தில் நடிகை திஷா பதானியின் வீட்டில் மர்மநபர்கள் துப்பாக்கிச் சூடு

உத்தரபிரதேசத்தின் பரேலியில் உள்ள நடிகை திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர், பின்னர் இதற்கு ரோஹித் கோதாரா மற்றும் கோல்டி பிரார் கும்பலைச் சேர்ந்த ஒருவர் பொறுப்பேற்றுள்ளார்.
நடிகை பதானி ஆன்மீகத் தலைவர் பிரேமானந்த் மகாராஜை அவமதித்ததாகக் கூறி தாக்குதல் நடைபெற்றுள்ளது.
ஒரு பேஸ்புக் பதிவில், அந்தக் கும்பலைச் சேர்ந்த வீரேந்திர சரண், தெய்வங்களையும் சனாதன தர்மத்தையும் அவமதித்ததை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும், துப்பாக்கிச் சூடு ஒரு “டிரெய்லர்” என்றும் பதிவிட்டுள்ளார்.
“அடுத்த முறை, அவர் அல்லது வேறு யாராவது எங்கள் மதத்திற்கு அவமரியாதை காட்டினால், அவர்களை அவர்களின் வீட்டை விட்டு உயிருடன் வெளியேற விடமாட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“இந்தச் செய்தி அவருக்கு மட்டுமல்ல, அனைத்து திரைப்படக் கலைஞர்கள் மற்றும் அவருடன் தொடர்புடைய மக்களுக்கும். எதிர்காலத்தில் யாராவது எங்கள் மதம் மற்றும் புனிதர்களுடன் தொடர்புடைய இதுபோன்ற அவமரியாதைச் செயலைச் செய்தால், விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள். எங்கள் மதத்தைப் பாதுகாக்க நாங்கள் எந்த அளவிற்கும் செல்லத் தயாராக இருக்கிறோம். எங்களுக்கு, மதமும் முழு சமூகமும் எப்போதும் ஒன்றுதான், அவர்களைப் பாதுகாப்பது எங்கள் முதல் கடமை” என்று பதிவில் மேலும் கூறப்பட்டுள்ளது.
நடிகையின் தந்தை ஜெகதீஷ் பதானி இது தொடர்பாக போலீசில் புகார் அளித்ததை அடுத்து, தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய போலீசார் ஐந்து குழுக்களை அமைத்துள்ளனர்.