கிரேக்க பத்திர பரிவர்த்தனை வழக்கு – அஜித் நிவார்ட் கப்ரால் விடுதலை!
கிரேக்க பத்திர பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் இருந்து முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி முன்பு இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம், அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை வாபஸ் பெற நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
2011 ஆம் ஆண்டில், கிரீஸ் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தபோதிலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தெரிந்தே கிரேக்க கருவூலப் பத்திரங்களை வாங்கத் தொடங்கியதாகவும், இதனால் அரசாங்கத்திற்கு 184 மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து CIABOC வழக்குத் தொடர்ந்தது.
இருப்பினும் பிரதிவாதிகள் மத்திய வங்கி விதிமுறைகள் மற்றும் நிதி அறிக்கையிடல் தேவைகளுக்கு இணங்க இந்த பரிவர்த்தனை சட்டப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்டதாக உச்ச நீதிமன்றம் முன்னர் தீர்ப்பளித்ததாக சுட்டிக்காட்டினர்.
அத்துடன் இந்த விஷயத்தை இரண்டாவது முறையாக ஊழல் வழக்காக தொடர CIABOC எடுத்த முடிவு நியாயமற்றது என்றும் தெரிவித்திருந்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹைல் மேற்படி அவர்கள் மூவரையும் விடுவித்து உத்தரவு பிறப்பித்தார்.




