யாழ் மாவட்ட வெள்ள நிவாரணத்திற்காக 365.6 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு: அரசாங்க அதிபர் தகவல்
ஜனாதிபதி செயலகத்தின் அனுசரணையில், வேலணை பிரதேச செயலகத்தில் இன்று மாபெரும் மக்கள் நடமாடும் சேவை நடைபெற்றது. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், தீவக மக்கள் அரச சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக நகர்ப்புறங்களுக்கு அலைவதைத் தவிர்க்கும் நோக்கில் இச்சேவை முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வில் உரையாற்றிய அரசாங்க அதிபர், யாழ் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 365.6 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். நிவாரணக் கொடுப்பனவுகளை வழங்கும் போது கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மிகவும் வெளிப்படைத் தன்மையுடன், மக்கள் நலன் சார்ந்து செயற்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
இந்த நடமாடும் சேவையில் தேசிய அடையாள அட்டை, வாகன வருமான அனுமதிப்பத்திரம், காணித் தொடர்பான தீர்வுகள் மற்றும் இலவசக் கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டன. அத்துடன், தகுதியான பொதுமக்களுக்குக் காணி உறுதிப்பத்திரங்கள், சக்கர நாற்காலிகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களும் இதன்போது இலவசமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டன.





