பெங்களூரு நெரிசல் உயிரிழப்பு குறித்து கம்பீர் வெளியிட்ட தகவல்

பெங்களூருவில் ஆர்சிபி அணியின் ஐபிஎல் கோப்பை வெற்றியை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழாவில் கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், வெற்றி விழா அணிவகுப்பில் தனக்கு நம்பிக்கை இல்லை என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
புதன்கிழமை அன்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியில் லட்ச கணக்கான மக்கள் திரண்டனர். அப்போது ஒரே நேரத்தில் மைதானத்தின் நுழைவு வாயில்களில் அதிகளவிலான மக்கள் உள்ளே நுழைய முயன்ற காரணத்தால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 47 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், இது குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனது கருத்தை கூறியுள்ளார். “வெற்றி அணிவகுப்பில் எனக்கு எப்போதும் நம்பிக்கை இல்லை. இது நான் விளையாடிய காலத்திலும் சொல்லியது உண்டு. 2007 டி20 உலகக் கோப்பை தொடரில் பட்டம் வென்ற போது கூட வெற்றி அணிவகுப்பு கூடாது என்று நான் நினைத்தேன். இந்த கொண்டாட்டங்களை காட்டிலும் மக்களின் உயிரும், வாழ்வும் மிக முக்கியம். வருங்காலத்தில் இதுபோன்ற வெற்றி அணிவகுப்பில் விழிப்போடு இருந்து, அதை தவிர்க்கலாம்.
மிகவும் எளிய முறையில் இதை திட்டமிட்டு இது மாதிரியான நிகழ்வுகளை நடத்தலாம். பெங்களூரு கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இனி இது போல நடக்காது என்று நம்புகிறேன். ஏனெனில், நாம் எல்லோரும் பொறுப்புள்ள குடிமக்கள்” என்றார்.