பொலிஸாரின் உதவியுடனே இனி எரிபொருள் விநியோகம்
இனிவரும் காலங்களில் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக QR முறையின் கீழ் மாத்திரமே எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதன் தலைவர் டி.ஜே. ராஜகருண இன்று (15) பிற்பகல் நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் வைத்து இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“எமது எரிபொருள் முன்பதிவுகளள் (Orders) வழமை போன்று கிடைத்து வருகின்றன. எனவே, அடுத்த மாதம் இறுதி வரை எரிபொருள் விநியோகத்தில் எந்தச் சிக்கலும் இருக்காது. இன்று காலை முதல் QR முறை நடைமுறைக்கு வந்தபோது இணையதளங்களில் சில தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டிருக்கலாம்.
அதனால் மக்கள் வரிசைகளில் நின்று எரிபொருளைப் பெற்றனர். ஆனால் தற்போது அந்தத் தொழில்நுட்பப் பிரச்சினைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டுள்ளன.
எனவே, மக்கள் இனி வரிசைகளில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. சாதாரண நுகர்வோருக்குத் தேவையான எரிபொருள் அளவு தீர்மானிக்கப்பட்டு, அவை எரிபொருள் நிலையங்களில் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன.
வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், அதனை எந்த நேரத்திலும் பெற்றுக்கொள்ள முடியும்.
நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் QR குறியீட்டை ஸ்கேன் செய்து எரிபொருள் வழங்க முடியும். எனவே, எவரும் QR முறைக்கு புறம்பாக எரிபொருளைப் பெற வேண்டிய அவசியமில்லை.
இதனை உறுதிப்படுத்தப் பொலிஸார் தலையிடுவதுடன் தேவையற்ற முறையில் வரிசைகளில் நிற்பவர்களுக்கு இனி எரிபொருள் வழங்கப்பட மாட்டாது.
அதேபோல், எரிபொருள் நிலையங்களுக்கு நாம் வழங்கிய எரிபொருள் அளவுக்கும், QR ஊடாக விநியோகிக்கப்பட்ட அளவுக்கும் இடையே ஏதேனும் வித்தியாசம் காணப்பட்டால், சம்பந்தப்பட்ட நிலையங்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களது அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது.
பயணிகள் போக்குவரத்து பஸ்களுக்கு வழமை போன்று இலங்கை போக்குவரத்துச் சபை (CTB) ஊடாக எரிபொருள் வழங்கப்படும்.
அவர்களின் பயணத் தூரம் மற்றும் தினசரித் தேவைக்கேற்ப எரிபொருள் அளவு கணக்கிடப்பட்டு, அதற்கேற்ப QR ஒதுக்கீடு மாற்றியமைக்கப்படும்.
அத்துடன், மீன்பிடி மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான எரிபொருளையும் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.





