இந்தியாவில் கொவிட்-19 பாதிப்பால் 24 மணி நேரத்தில் நால்வர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் நால்வர் உயிரிழந்ததாக மத்திய சுகாதார, குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியிலும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் ஞாயிற்றுக்கிழமை முதல் தலா ஒருவர் வீதம் இப்பாதிப்புக்கு பலியாகி இருப்பது தெரியவந்துள்ளது.
அவர்களையும் சேர்த்து இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் நாட்டில் ஒட்டுமொத்த கொரோனா உயிரிழப்பு 32ஆக அதிகரித்துள்ளது.
திங்கட்கிழமை (ஜூன் 2) காலை 8 மணி நேர நிலவரப்படி 3,961 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அதிகாரபூர்வ தரவுகளின்படி, ஞாயிற்றுக்கிழமை முதல் 203 புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது கேரளாவில் 1,435 பேரும் டெல்லியில் 483 பேரும் மகாராஷ்டிராவில் 506 பேரும் மேற்கு வங்கத்தில் 331 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்துப் பேசிய மத்திய சுகாதாரம், ஆயுஷ் துறை இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ், “மத்திய சுகாதாரத் துறை அமைச்சும் ஆயுஷ் அமைச்சும் முழு விழிப்புநிலையில் உள்ளன. அனைத்து மாநிலங்களிலும் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்,” என்று கூறியுள்ளார்.