வெளிநாட்டு உதவி: கணக்காய்வு குறித்து ஆராய்வு!
வெளிநாட்டு நிவாரண உதவி (விநியோகங்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர் மட்டக் குழுவின் (HL-FRAC) எட்டாவது கூட்டம் நேற்று (21) நடைபெற்றது.
பாதுகாப்பு பிரதித் அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண் ஜயசேகர தலைமையில் பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் மேற்படி கூட்டம் நடைபெற்றது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு நிவாரண உதவிகளை நிர்வகிப்பதில் ஒருங்கிணைப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை வலுப்படுத்துவது குறித்து கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
அனர்த்த தயார்நிலை மற்றும் நிவாரணப் பொருட்களின் சமமான விநியோகத்தை உறுதி செய்வதற்காக, 22 நாடுகளில் இருந்தும் உலக உணவுத் திட்டத்திலிருந்தும் (WFP) பெறப்பட்ட வெளிநாட்டு நிவாரணப் பொருட்களின் துல்லியமான தகவல் பகிர்வு பற்றி ஆராயப்பட்டது.
மேலும் பயனுள்ள ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான மையப்படுத்தப்பட்ட அனர்த்தத் தரவு உள்ளீட்டு அமைப்பின் முன்னேற்றம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இந்நடவடிக்கைகளில் குழுவின் தீவிர ஈடுபாடு மற்றும் தொடர்ச்சியான பங்களிப்புக்காக பிரதித் அமைச்சர் பாராட்டுத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணப் பொருட்கள் தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக வழித்தடங்கள் –
மற்றும் பொது உள்கட்டமைப்புகளை மீட்டெடுப்பதில் முக்கிய பங்கு வகித்த ஆயுதப்படைகளின் அர்ப்பணிப்பு மற்றும் உதவியையும் அவர் பாராட்டினார்.
நன்கொடையாக வழங்கப்பட்ட பொருட்களின் சரியான பயன்பாட்டை உறுதி செய்வதற்காகவும் வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்துவதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும் குழு மதிப்பாய்வு செய்தது.
மேலும், தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையத்தின் (NDRSC) களஞ்சியசாலை தரவு சேகரிப்புக்கான நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல், பாதைகள் மறுசீரமைப்பை உட்பட நிர்வாக மற்றும் உள்கட்டமைப்பு திறனை உயர்த்துதல் போன்ற பல அம்சங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மத்திய தரவு ஒருங்கிணைப்பு முறைமையின் புதுப்பிப்பு மற்றும் மாவட்ட, பிரதேச செயலக அதிகாரிகளுக்கான கணினித் தரவு உள்ளீடு தொடர்பான பயிற்சி நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இக்கூட்டத்தில் குழு உறுப்பினர்கள், சிரேஷ்ட அரச அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ மையம் (DMC) மற்றும் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையம் (NDRSC) ஆகியவற்றின் சிரேஷ்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.





