மரண தண்டனை நிறைவேற்றத்துக்குமுன் டிரம்ப்புக்குச் செய்தி விடுத்த புளோரிடா தொடர் கொலையாளி

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில், தொடர் கொலைகளில் ஈடுபட்ட 62 வயது நபருக்கு வியாழக்கிழமை (மே 15) மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாநிலச் சிறைச்சாலையில் உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை மாலை 6.16 மணிக்கு கிளேன் ரோஜர்ஸ் எனும் அந்த நபருக்கு ஊசி மூலம் நச்சு மருந்து செலுத்தப்பட்டது.1995ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டினா மேரி கிரிப்ஸ் எனும் பெண்ணைக் கொலை செய்தது தொடர்பில் இந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ரோஜர்ஸ் கடைசியாகக் கூறியவற்றை ‘த டம்பா பே டைம்ஸ்’ நாளேடு வெளியிட்டுள்ளது.
எளிதில் புரிந்துகொள்ள இயலாத வகையில் அமைந்துள்ள அவரது பேச்சில் தன்னால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் எழுப்பும் கேள்விகளுக்கு விரைவில் பதில் கிடைக்கும் என்றும் அதன்மூலம் அவற்றுக்கு ஒரு முற்றுப்புள்ளி இடலாம் என்றும் ரோஜர்ஸ் கூறியதாக நாளேடு கூறியது.அத்துடன், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் ரோஜர்ஸ் செய்தி விடுத்துள்ளார்.
“தொடர்ந்து அமெரிக்காவை உயர்த்துங்கள்,” என்று அதிபரைக் கேட்டுக்கொண்ட அவர், “நான் போகத் தயார்,” என்றும் கூறினார்.
கொலை செய்யப்பட்ட 34 வயது கிரிப்ஸ் இரு குழந்தைகளுக்குத் தாயார். கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட அவரது சடலம் ஹோட்டல் அறையின் குளியல்தொட்டியில் காணப்பட்டது.
அதே ஆண்டு கலிஃபோர்னியாவில் 33 வயது சேண்ட்ரா கலாகெரையும் ரோஜர்ஸ் கொலை செய்ததாகத் தீர்ப்பளிக்கப்பட்டது. மிசிசிப்பி, லூசியானா ஆகிய இடங்களில் மேலும் இரு பெண்களை அவர் கொலை செய்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
ரோஜர்சையும் சேர்த்து அமெரிக்காவில் இந்த ஆண்டு (2025) 16 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 12 பேருக்கு நச்சு மருந்து ஊசி மூலமும் இருவருக்கு நைட்ரஜன் வாயுவைப் பயன்படுத்தியும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட வேளையில் இருவர் ‘ஃபையரிங் ஸ்குவாட்’ எனப்படும் ஒரே நேரத்தில் அதிகாரிகள் பலர் சேர்ந்து துப்பாக்கியால் சுடும் முறையின்கீழ் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மரண தண்டனையை ஆதரிக்கும் அதிபர் டிரம்ப், பதவியேற்ற முதல் நாளிலேயே ‘ஆக இழிவான’ குற்றச்செயல்களுக்கும் மரண தண்டனை விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.