பெப்ரவரி 04 தமிழரின் கறுப்பு தினம்- வடக்கு, கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டம்
எதிர்வரும் 04 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினமாகவும் தமிழருக்கு கறுப்பு தினமாகவும் பிரகடனப்படுத்தப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் த.யதுசன் தெரிவித்துள்ளார்..
வவுனியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
குறிப்பாக இந்த போராட்டமானது வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படவுள்ளது. அந்தவகையில் வடக்கு மாகாணத்திலே கிளிநொச்சி மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங்களை மையப்படுத்தி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும் இப் போராட்டத்தினை வலுவடையச் செய்வதற்காக பல்வேறுபட்ட அமைப்புக்களுடன் சந்திப்புக்களையும், உரையாடல்களையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம்.
அந்தவகையில் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் தற்போது வவுனியாவிலும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே போராட்டமானது சிறப்பாக நடைபெறுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என்றார்.





