இதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்த பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர்

பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் இதய செயலிழப்பு காரணமாக கோழிக்கோடு பேபி மெமோரியல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.சிகிச்சை பலனின்றி அவர் புதன்கிழமை (டிசம்பர் 25) இரவு காலமானார். அவருக்கு வயது 91.
மலையாள இலக்கியம் மற்றும் திரையுலகில் அழியாத முத்திரை பதித்த எம்.டி.வாசுதேவன் நாயர் பத்ம பூஷண் விருது பெற்றவர். சிறந்த திரைக்கதைக்காக இவர் நான்கு முறை தேசிய விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது என்று தந்தி போன்ற ஊடகங்கள் குறிப்பிட்டன.
இவரது மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயரின் மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “மலையாள திரையுலகம் மற்றும் இலக்கியத்தில் மிகவும் மதிக்கப்படும் நபர்களில் ஒருவரான எம்.டி.வாசுதேவன் நாயரின் மறைவு வருத்தமளிக்கிறது. அவரது படைப்புகள், மனித உணர்வுகளின் ஆழமான ஆய்வுடன், தலைமுறைகளை வடிவமைத்துள்ளதோடு மேலும் பலருக்கு ஊக்கமளித்துள்ளன.
அமைதியானவர்களுக்கும் ஒதுக்கப்பட்டவர்களுக்கும் குரல் கொடுத்தவர். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி,” என்று பதிவிட்டார்.