முட்டைகளில் காலாவதி திகதி அவசியம் – புதிய உத்தரவு அடுத்த மாதம் முதல் அமுல்
கடைகளில் விற்பனை செய்யப்படும் முட்டைகளில் காலாவதி திகதியைக் கட்டாயமாக அச்சிடப்பட வேண்டும் என உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, ஏப்ரல் முதலாம் திகதி முதல் பழைய முட்டைகளை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உ.பி.யில் முட்டை வர்த்தகத்தின் மீதான தனது பிடியை முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு இறுக்கியுள்ளது. இதன்படி, அம்மாநிலத்தில் பழைய முட்டைகளை புதியவை என்று கூறி விற்பனை செய்ய முடியாது.
இதனால், உ.பி.யில் கடைக்காரர்கள் இனி பழைய அல்லது சேதமடைந்த முட்டைகளை ’புதியவை’ எனக் கூறி விற்க முடியாது. ஒரு முட்டை எவ்வளவு பழமையானது மற்றும் அது எவ்வளவு காலம் பாதுகாப்பாக இருக்கும் என்பதை வாடிக்கையாளர்களே முத்திரையிட்ட தேதிகளைப் பார்த்துத் தீர்மானிக்கலாம்.
இது, நுகர்வோரின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை என உ.பி. அரசு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. உ.பி.யின் கால்நடை வளர்ப்புத் துறை மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையின் அறிவுறுத்தல்களின்படி இந்த விதி செயல்படுத்தப்படுகிறது. முட்டைகள் மனித ஆரோக்கியத்துடன் நேரடியாகத் தொடர்புடையவை என்பதால் இந்த முடிவு எனவும் விளக்கப்பட்டுள்ளது.
உ.பி.யில் இதுவரை பரவலான இடங்களில் பழைய முட்டைகள் விற்பனை செய்யப்பட்டதாக முறைப்பாடுகள் அரசுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
முட்டைகளின் நிலை என்ன என்பதும் வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் இருந்தது. இப்போது, புதிய உத்தரவை அமுல்படுத்துவதன் மூலம், முட்டைகளின் நிலை மீதான வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது. மேலும், மக்களுக்குப் பாதுகாப்பான முட்டைகள் கிடைக்கவும் வழி பிறந்துள்ளது.





