அவசர நிதிக்கான குறை நிரப்பு பிரேரணை நாளை சமர்ப்பிப்பு!
இலங்கை நாடாளுமன்றம் நாளை (18) முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடவுள்ளது.
டித்வா புயல் தொடர்பான நிவாரணப் பணிகளுக்குத் தேவையான அவசர நிதியை பெறுவதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறுவதற்காகவே விசேட சபை அமர்வு நடக்கின்றது.
இதற்கமைய 500 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணை சபையில் முன்வைக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது.
இந்த யோசனைக்கு எதிரணிகள் முழுமையான ஆதரவை வழங்கவுள்ளன என்று அறியமுடிகின்றது.
ஜனாதிபதி வசம் நிறைவேற்று அதிகாரம் இருந்தாலும், நாடாளுமன்றத்துக்கே நிதி அதிகாரம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறைநிரப்பு பிரேரணை தொடர்பில் நாளை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, 19 ஆம் திகதி நிறைவேற்றப்படவுள்ளது.
நாடாளுமன்றத்தில் கடந்த 5 ஆம் திகதி வரவு- செலவுத் திட்ட கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர் ஜனவரி 6 ஆம் திகதியே சபை மீண்டும் கூடும் என அறிவிக்கப்பட்டது.
எனினும், பேரிடரை அடுத்து பிரதமரால் விடுக்கப்பட்ட விசேட கோரிக்கைக்கமையவே அவசர நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கின்றது.





