மின்சார சபையின் இறுதி ஊர்வலம் ஆரம்பம்: அபாய சங்கு ஊதுகிறார் சஜித்!
“தேசிய நிறுவனங்கள் பாதுகாக்கப்படும் எனக்கூறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இன்று மின்சார சபையின் இறுதி ஊர்வலத்தை அறிவித்துள்ளது.” என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa குற்றஞ்சாட்டியுள்ளார்.
“ இலங்கையின் தேசிய நிறுவனங்களை பாதுகாத்து தனியார்மயமாக்கலை தடுக்க வேண்டும் என்பதே தேர்தலுக்கு முன்பு ஜே.வி.பியின் JVP நிலைப்பாடாக அமைந்திருந்தது.
ஆனால் இன்று அதற்கு மாறான செயல்பாடே இடம்பெறுகின்றது.” எனவும் அவர் கூறினார்.
“மின்சார சபை ஊழியர்களை வீதிகளுக்கு இறக்கி மின்சார சபையில் கைவைக்க விட மாட்டோம் என்று ஜே.வி.பி. அன்று சூளுரைத்தது. தற்போது ஆட்சிக்கு வந்த பின்னர் மின்சார சபையை பல நிறுவனங்களாக பிரித்து வழங்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இதில் சீர்திருத்தமும் மறுசீரமைப்பும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றாலும் இந்நிறுவனத்தை இல்லாதொழிக்க மக்கள் இடமளிக்கவில்லை. தேசிய நிறுவனங்களை பாதுகாக்கவே மக்கள் இடமளித்தனர்.
நாட்டின் மின்சக்தித் துறை தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்ட விடயமாகும். இதன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை இதை விட அதிக சிந்தனையுடனும் பொறுப்புணர்வுடனும் மற்றும் வகைகூறலுடனும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஏற்கனவே நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை அழித்த இந்த அரசாங்கம் இப்போது மின்சார சபையையும் நாசமாக்கியுள்ளது.
நமது நாட்டின் ஆற்றல் துறையை ஆபத்தில் தள்ளி, மின்சார சபையின் 23,000 பேரின் எதிர்காலத்தை இந்த அரசாங்கம் இருளுக்கு இட்டுச் சென்றுள்ளது.
இனியாவது இவர்களால் ஏமாற வேண்டாம். இது மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் அல்ல என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறினார்.





