டெல்லியில் நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் சாலைகளில் தஞ்சம் புகுந்த மக்கள்

இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் பிப்ரவரி 17ஆம் திகதி அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால், மக்கள் அச்சமடைந்து சாலையில் தஞ்சமடைந்தனர்.அது ரிக்டர் அளவில் 4.0 ஆகப் பதிவானதாக தேசியப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் சேதம் அல்லது காயம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை. இந்த நிலநடுக்கம், புதுடெல்லியை மையமாகக் கொண்டு, திங்கட்கிழமை இந்திய நேரப்படி அதிகாலை 5:36 மணிக்கு ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.
தௌலா குவானில் உள்ள துர்காபாய் தேஷ்முக் சிறப்புக் கல்விக் கல்லூரிக்கு அருகில் இந்த நிலநடுக்கம் மையம்கொண்டிருந்ததாக அதிகாரி ஒருவர் பிடிஐ ஊடகத்திடம் தெரிவித்தார். நிலநடுக்கம் ஏற்பட்டபோது பலத்த சத்தம் கேட்டதாகவும் கூறப்பட்டது.
அப்பகுதிக்கு அருகில் ஏரி ஒன்று இருக்கிறது. அங்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சிறிய, குறைந்த அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதாகக் கூறப்பட்டது. கடந்த 2015ஆம் ஆண்டு 3.3 ரிக்டர் அளவில் தௌலா குவான் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டது.
புதுடெல்லி, நொய்டா, கிரேட்டர் நொய்டா, காசியாபாத் ஆகிய பகுதிகளில் உயரமான கட்டடங்களில் வசித்த மக்கள் நிலநடுக்கத்தால் அவசரமாக வெளியேறினர். இதேபோன்று, புதுடெல்லி ரயில்வே நிலையத்தில் ரயிலுக்காகக் காத்திருந்த பயணிகளும் நிலநடுக்கம் உணரப்பட்டது என தெரிவித்துள்ளனர். ரயில் நிலையத்தில் உள்ள கடைகளில் நின்றிருந்த வாடிக்கையாளர்கள் நிலநடுக்கம் ஏற்பட்டதும் அலறியடித்தபடி ஓடினர்.
ரயில் பயணிகளில் சிலர், கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை தான் உணர்ந்ததாக இந்திய ஊடகத்திடம் தெரிவித்தனர்.மேலும், இதுபோன்று இதற்கு முன்பு நாங்கள் உணர்ந்ததில்லை என்றும் முழு கட்டடமும் குலுங்கியது என்றும் அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, பீகார், ஒடிசாவிலும் திங்கட்கிழமை இந்திய நேரப்படி காலை 8 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அது ரிக்டர் அளவில் 4ஆக பதிவானதாகவும் கூறப்பட்டது.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “புதுடெல்லியிலும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. அனைவரும் அமைதியாக இருக்கவும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும் கேட்டுக்கொள்கிறோம். அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்,” எனக் கூறினார்.