H-1B விசா முறையில் அதிரடி மாற்றம் – ட்ரம்பின் அடுத்த திட்டம் பெப்ரவரியில் அமுல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்ற பிறகு விசா நடைமுறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போதும் ட்ரம்ப் நிர்வாகம் H-1B வேலை விசா திட்டத்தில் புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது.
அதாவது, அமெரிக்காவில் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான H-1B விசா நடைமுறையில் குலுக்கல் முறை (lottery system)இரத்து செய்யப்பட்டுள்ளது.
அதற்குப் பதிலாக அதிக சம்பளம் மற்றும் மிகச்சிறந்த பணித்திறன் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டம் எதிர்வரும் பெப்ரவரி 27 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
தகுதியற்றவர்களைக் குறைந்த சம்பளத்தில் பணியமர்த்த குலுக்கல் முறை தவறாகப் பயன்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் அமெரிக்க தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்புகள் மற்றும் சம்பளங்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டள்ளது என
அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்த மாற்றத்தின் காரணமாக, இந்திய நிபுணர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய தேர்வு முறை
புதிய தேர்வு முறை விண்ணப்பதாரர்களின் திறன் மற்றும் சம்பளத்தை முக்கியமாகக் கருதுகிறது.
இதனால் அதிக திறமையுள்ள மற்றும் அதிக சம்பளம் பெறும் விண்ணப்பதாரர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படும்.
தற்போதைய குலுக்கல் முறை (lottery system) குறைந்த சம்பளத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த பயன்படுத்தப்பட்டதாக
அமெரிக்காவின் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) தெரிவித்துள்ளது.
மேலும் புதிய திட்டம் H-1B திட்டத்தின் நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றும் என்றும் அதிக திறமையுள்ள விண்ணப்பதாரர்களுக்கு வாய்ப்புகளை வழங்கும்
என்றும் USCIS இன் செய்தித் தொடர்பாளர் மேத்யூ ட்ரேஜெஸர் கூறியுள்ளார்.
வரம்புகள் மற்றும் நிபந்தனைகள்
H-1B வேலை விசா திட்டத்தில், அமெரிக்க அரசு வருடத்திற்கு 65,000 விசாக்களை வழங்குகிறது.
மேம்பட்ட பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு கூடுதலாக 20,000 விசாக்கள் வழங்கப்படும்.
USD 100,000 கட்டணம் மற்றும் முதலாளிகளின் கடுமையான ஆய்வுகள் அமுல்படுத்தப்படும்.
டிசம்பர் மாதம் 15 முதல், H-1B மற்றும் H-4 விண்ணப்பதாரர்கள் மேம்பட்ட சோதனை மற்றும் சமூக ஊடக சரிபார்ப்புக்கு உட்பட்டுள்ளனர்.
இதேவேளை, H-1B விசா உரிமை அல்ல என்று கூடிய அமெரிக்க வெளியுறவுத்துறை இது ஒரு சலுகை மட்டுமே என சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய விண்ணப்பங்களை அடையாளம் காண அனைத்து தகவல்களையும் பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.
புதிய தேர்வு முறை – எதிர்கால தாக்கங்கள் (முக்கிய கணிப்புகள்)
இந்திய தொழிலாளர்கள் H-1B விசாவின் மிகப்பெரிய குழுவில் உள்ளதால், இந்திய விண்ணப்பதாரர்கள் அதிகமாக பாதிக்கப்படுவர்.
ஆனால், மேம்பட்ட கல்வி, உயர் திறன் மற்றும் அதிக சம்பளம் கொண்டவர்கள் முன்னிலை பெறுவார்கள்.
அமெரிக்க நிறுவனங்கள் அதிக செலவோடு திறமையான தொழிலாளர்களை தேர்வு செய்ய ஆர்வமாக இருக்கும்
USD 100,000 கட்டணம், கடுமையான ஆய்வுகள் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் காரணமாக, சிறந்த திறமையுள்ள தொழிலாளர்களுக்கு மட்டும் வாய்ப்பு அதிகம்.
இதனால் அமெரிக்க நிறுவனங்களில் போட்டித்தன்மை அதிகரிக்கும்.
காலப்போக்கில் H-1B திட்டம் குறைந்த தவறுகளுடன் செயல்படும், தற்போதைய குலுக்கல் முறை துஷ்பிரயோகப்படுத்தப்பட்டதை குறைத்து, திறமை அடிப்படையிலான தேர்வு செயல்முறை அமல்படுத்தப்படுவதை காட்டுகிறது.
இது அமெரிக்க தொழிலாளர்களுக்கான பாதுகாப்பையும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
விண்ணப்ப நேரம் மற்றும் தாமதங்கள்
புதிய கட்டுப்பாடுகள், சோதனை மற்றும் சமூக ஊடக சரிபார்ப்புகள் காரணமாக, விசா விண்ணப்பங்கள் தாமதப்படலாம்.
எதிர்காலத்தில், H-1B விண்ணப்பத் தாமதங்கள் ஒரு பொதுவான நிலையாக இருக்கலாம்.
பொதுவாக தொழில்நுட்ப மற்றும் கல்வி துறைகளில் மேலான திறமையுள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் வருகை அதிகரிக்கும்
இதனால், அமெரிக்காவில் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி துறைகள் மேலும் வலுப்படும்.
எவ்வாறாயினும் இந்த புதிய திட்டம் அமெரிக்க தொழில் மற்றும் தொழில்நுட்பத் துறைகளுக்குநன்மையும் போட்டித்தன்மையும் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாற்றம், அமெரிக்காவின் வேலைவாய்ப்பு, நிதி மற்றும் குடியுரிமை அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு முக்கியப் படி என்பதும் குறிப்பிடத்தக்கது.





