‘போலிக்கு இரையாகாதீர்கள்’ :ஈரானில் பல கடத்தல் சம்பவங்களை அடுத்து இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை

ஈரானுக்குப் பணி நிமித்தமாகச் செல்லும் இந்தியர்களை அந்நாட்டில் உள்ள ஆள் கடத்தல் கும்பல் பணத்துக்காகக் கடத்துவதாக இந்திய வெளியுறவு அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது
இந்தியர்களைக் கடத்திய பிறகு, அவர்களை விடுவிக்க கணிசமான தொகையை அளிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தார் மிரட்டப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘‘இந்திய குடிமக்களும் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வாக்குறுதிகள் அல்லது சலுகைகள் குறித்து அதிக விழிப்புணர்வு இருக்க வேண்டும். குறிப்பாக, சுற்றுலா செல்லும் இந்தியர்களுக்கு மட்டும்தான் விசா இல்லாத அனுமதியை ஈரான் அரசு அனுமதிக்கிறது. சுற்றுலா தவிர்த்த மற்ற வர்த்தகம், வேலை போன்ற விஷயங்களுக்கு கண்டிப்பாக விசா அவசியம். எனவே, ஈரான் விசா பெற்று தரும் முகவர்களுக்கும் குற்ற கும்பல்களுக்கும் தொடர்பு இருக்கலாம். இந்தியர்கள் மோசடியில் சிக்கி கொள்ள வேண்டாம்’’ என்று இந்திய வெளியுறவு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
வடமேற்கு டெல்லியில் உள்ள நரேலாவைச் சேர்ந்த 26 வயது ஹிமான்ஷு மாத்தூர் என்பவர் ஈரானில் கடத்தப்பட்டுத் துன்புறுத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. மாத்தூரிடம் ஆஸ்திரேலிய விசாவில் கப்பல்களில் வேலை எளிதில் கிடைப்பதாக அமன் ரதி என்பவர் ஆசை காட்டியுள்ளார். அதற்காகவே நொய்டாவில் இருக்கும் தனியார் கல்வி நிறுவனத்தில் கப்பல் துறையில் பட்டயக் கல்வியை மாத்தூர் முடித்தார். பின்னர் தனது சகோதரர் மூலம் ரூ.12 லட்சம் செலுத்தி ஈரானுக்கு அமன் ரதியுடன் பயணம் செய்தார்.
ஈரானில் உள்ள சபாஹாரில், மாத்தூருடன் அமன் ரதியும் அவர்களது முகவருடன் தொடர்புடைய ஒரு கும்பலால் கடத்தப்பட்டனர். 1 கோடி கேட்டு மிரட்டியவர்களிடம் பேசி ரூ.20 லட்சம் அளித்த பின் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தியா திரும்பிய பிறகு, அவர்கள் செப்டம்பர் 7ஆம் திகதி டெல்லி காவல்துறையில் புகார் செய்தனர்.