மெக்சிகோ, கனடா மீதான கூடுதல் வரி விதிப்பு – தற்காலிகமாக நிறுத்திய டொனால்ட் டிரம்ப்
அண்டை நாடான கனடா மற்றும் மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப அறிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்குள் சட்டவிரோத அகதிகள் மற்றும் போதைப் பொருள்கள் வருவதைத் தடுப்பதற்காக கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் மீது கூடுதலாக 25 சதவீத இறக்குமதி வரி விதிப்பு நடவடிக்கையை டிரம்ப் எடுத்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு மெக்சிகோவும் கனடாவும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷேன்பாம் மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் டிரம்புடன் தொலைபேசி வழியாக திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது மெக்சிகோ, கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை குறித்து 3 தலைவர்களும் விவாதித்தனர்.
அதனைத்தொடர்ந்து, கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கையை 30 நாள்களுக்கு ஒத்திவைக்க அமெரிக்க ஜனாதிபதி சம்மதித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மேற்கண்ட இரு நாட்டு தலைவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், “அமெரிக்க – மெக்சிகோ எல்லையில் உடனடியாக 10,000 ராணுவ வீரர்களை நிறுத்துவதற்கு கிளாடியா ஒப்புக் கொண்டுள்ளார். இந்த வீரர்கள் எங்கள் நாட்டில் சட்டவிரோதமாக நுழையும் மக்களை தடுத்து நிறுத்துவார்கள். மேலும் 25 சதவீத வரிவிதிப்பை தற்காலிகமாக ஒரு மாதகாலம் நிறுத்திவைப்பது என்ற முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம். இரு நாடுகளுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் நிறைவேறும் வரையில் பேச்சு தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.