அமெரிக்க தேர்தல் முடிவுகளில் அதிருப்தி – இத்தாலியில் அமெரிக்கர்களுக்கு ஒரு யூரோவில் வீடு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில் அதிருப்தி அடைந்த அமெரிக்கர்களை ஈர்க்க இத்தாலியின் ஒல்லோலாய் பகுதி திட்டமிட்டுள்ளது.
இம்மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டோனல்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். அதை விரும்பாத அமெரிக்கர்களை ஈர்க்க ஒல்லோலாய் ஊர் மக்கள் ஓர் இணையப்பக்கத்தை உருவாக்கியுள்ளனர்.
தற்காலிக இலவச வீடுகள், புதுப்பிக்கப்பட வேண்டிய வீடுகள் ஒரு யூரோவிற்கு, உடனே தங்கக்கூடிய வீடுகள் ஆகியவை வழங்கப்படுகின்றது.
உடனே தங்கும் வசதிகள் கொண்ட வீடுகளின் விலை அதிகபட்சம் 105,000 டொலராகும்.
மற்ற நாடுகளைச் சேர்ந்தோரும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்று அந்த ஊரின் மேயர் குறிப்பிட்டுள்ளார்.
வீடுகளின் படங்களும் விரைவில் இணையப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இதுவரை வீடுகள் பற்றிய விவரங்களைக் கேட்டு 38,000 கோரிக்கைகள் வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்காவிலிருந்து வந்தவை. கடந்த நூற்றாண்டில் ஒல்லோலாய் ஊரின் மக்கள்தொகை 2,250இலிருந்து 1,300க்குக் குறைந்துவிட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஒருசில குழந்தைகள் மட்டுமே பிறக்கின்றன. வேலை தேடி சில குடும்பங்கள் ஊரைவிட்டு வெளியேறிவிட்டனர். தற்போது அங்கு சுமார் 1,150 பேர் மட்டுமே உள்ளனர்.
மக்கள்தொகையை அதிகரிப்பதற்காக 2018ஆம் ஆண்டு ஒரு யூரோவிற்கு வீடுகளை விற்கும் திட்டம் ஒல்லோலாயில் தொடங்கியது. எனினும் 10 வீடுகள் மட்டுமே விற்கப்பட்டுள்ளன.